தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், மலைவாச ஸ்தலங்களில் ஒன்றாகவும் இருப்பது கொடைக்கானல். இங்கு வழக்கமாகவே அதிகமான சுற்றுலாப் பயணிகள் அனைத்து சீசன்களிலும் வருவது உண்டு. அதிலும் கோடைக் காலத்தில் வார நாட்களை விட வார இறுதி நாட்களிலேயே இதன் குளுமையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

களையிழந்த கொடைக்கானல் :
தற்போது கோடை வெயில் முன்கூட்டியே துவங்கி விட்டதால் அதிகமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு விடுமுறையை கழிக்க செல்ல துவங்கி உள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மலைப்பாதையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் 2024ம் ஆண்டு மே மாதம் முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக கோடைக்கால சீசனில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் கொடைக்கானல் களையிழந்து காணப்பட்டது.
கோர்ட் உத்தரவு :
இ-பாஸ் விண்ணபித்த அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டாலும் இது பற்றி தெரியாமல் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வழியுறுத்தப்பட்டது. இதற்கிடையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் சார்பில் ஆய்வு நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

புதிய வாகன கட்டுப்பாடு :
இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆகும் என்பதாலும், கோடை விடுமுறை துவங்கி வருவதால் போக்குவரத்து நெரிசலை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புதிய வாகன கட்டுப்பாடுகளை கோர்ட் விதித்துள்ளது. அதன்படி, கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசு பஸ்களில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு காலம் :
இந்த புதிய வாகன கட்டுப்பாடு ஏப்ரல் 01ம் தேதி துவங்கி, ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோடை சீசனை மட்டுமே வாழ்க்கை நடத்தி வரும் கொடைக்கானல் உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெறவும் கோரிக்கை வலுத்து வருகிறது. கோர்ட்டின் இந்த புதிய வாகன கட்டுப்பாட்டால் சொந்த வாகனங்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அரசு பஸ்கள் மூலம் அதிகமானவர்கள் வந்தால் தங்கும் விடுதி போன்றவற்றிற்கும் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை ஏற்படலாம் என பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த புதிய கட்டுப்பாடுகளை நன்கு தெரிந்து கொண்ட பிறகு கொடைக்கானல் டூர் குறித்து திட்டமிடுவது கடைசி நேர சிரமங்களை குறைக்க உதவும்.



Click it and Unblock the Notifications






