ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பெங்களூரு செல்லும் சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
வெள்ள நீரால் மிதக்கும் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் வெள்ளக்காடானது. பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்
பெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக, ஊத்தங்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே ஏரி உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள், ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பல சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு
ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று (டிச.2) காலை 7 மணி நிலவரப்படி 50 செ.மீட்டர்( 503 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது. இதனால், ஊத்தங்கரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளது. குறிப்பாக, ஊத்தங்கரை - திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரி் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாடகைக்காக நிறுத்தப்பட்டிருந்த கார், மினிவேன்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, திருப்பத்தூர், சிப்காட் சாலையிலும் போக்குவரத்து துண்டிப்பு
இதே போல், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 25 செ.மீட்டர் (250 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது. போச்சம்பள்ளி அருகே உள்ள கோணணூர் ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் வெளியேறி ஊருக்குள் வெள்ளப்பெருக்கெடுத்தால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரியின் உபரிநீர் போச்சம்பள்ளி காவல் நிலையம், 4 சாலையில் உள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது. மேலும், போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி, திருப்பத்தூர், சிப்காட் செல்லும் 3 சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இனியும் சேதங்கள் தொடரலாம்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து இன்று காலை வரை இடைவிடாத மழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை மற்றும் மேற்குறிப்பிட்ட இடங்கள் யாவும் பெங்களூரில் அருகில் இருந்தாலும் கூட, இதுவரை கிருஷ்ணகிரி-பெங்களூர் இணைப்பில் எந்த தடையும் ஏற்படவில்லை. இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!



Click it and Unblock the Notifications






