எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கும் அழகோ அழகு! பார்ப்பவர்களை தன்னுள் இழுக்கும் காந்த சக்தி! இயற்கை அன்னையின் மடியில் தவழும் ஒரு அழகிய பூமி! ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகைக் கண்டறிவதற்கான ஒரு நுழைவாயில்!...பர்வனூ பற்றி இனி என்ன சொல்ல முடியும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகை எப்படி வர்ணிப்பது?...
ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் ஆகியவற்றின் எல்லையிலுள்ள ஒரு அற்புத மலை வாசஸ்தலமாக விளங்கும் பர்வனூ, பசுமையான தாவரங்களால் சூழப்பட்டுள்ள, ஒரு சிறிய நகரம்.
ஒரு சிறிய கிராமமாக இருந்த பர்வனூ, ஹிமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்ற பின், ஒரு பெரிய தொழில் நகரமாக விளங்குகிறது. வரலாற்றுப்படி, பர்வனூ என்ற பெயர், ஹரியானா அருகில் உள்ள ஒரு கிராமமான ஊஞ்ச பர்வனூ என்ற பெயரிலிருந்து வந்தது.
பல மலைகள் மற்றும் பழத்தோட்டங்கள் உள்ள இடமாதலால், பர்வனூ ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ஒரு பெரிய தொழில் நகரம் என்று அழைக்கப்படும், பர்வனூ பல தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகளை கொண்டுள்ளது.
HPMC - யின் மிகப்பெரிய பழ செயலாக்க பிரிவு இங்குதான் உள்ளது. மோட்டார் பாகங்கள், பிளாஸ்டிக் மற்றும் பழங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நகர மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
பர்வனூவின் பழத்தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் பழங்கள் அனைத்தையும் ஜெல்லி வகைகள், ஜாம் மற்றும் பழச்சாறு தயாரித்தல் போன்றவை செய்யப் பயன்படுத்துகின்றனர்.
பல சமய மையங்கள், தோட்டங்கள், மற்றும் ஓய்வு விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. பின்ஜோரேயின் புகழ்பெற்ற முகலாய பூங்காக்கள் இலக்கிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும்.
மிகப் பிரபலமான கற்றாழைத் தோட்டம் 1987 ஆம் ஆண்டு இங்கு நிறுவப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய கற்றாழைத் தோட்டம் என கருதப்படும் இது சுமார் 7 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது.
டிம்பர் ட்ரேல் என்ற புகழ்பெற்ற ஓய்வு விடுதியை கேபிள் கார் மூலம் அடையலாம். ஆண்டு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது.
கேபிள் காரில், 10 முதல் 12 பயணியர் தங்கும் அளவிற்கு அறை உள்ளது. மேலும் விடுதியிலிருந்து பயணிகளை மலை உச்சிக்கு, ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு வழியே கொண்டு செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் உள்ள இந்த இடம் அடர்ந்த பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளது.
பர்வனூவிற்கு பயணிப்பவர்கள், ராணுவ நகரம் என்றழைக்கப்படும் தக்க்ஷையையும் காணலாம். இது நாட்டின் பழமையான பிரிட்டிஷ் கண்டோன்மெண்டுகளில் ஒன்றாகும்.
இந்த இடம் 1846 இல் பல போர்களின் களமாக இருந்ததாக அறியப்படுகிறது. போர் கைதிகளை வைக்க இங்கே ஒரு பெரிய சிறை கட்டப்பட்டது. தண்டனையின் ஒரு பகுதியாக, சிறையில் உள்ள கைதிகளின் தலையில் ஒரு நிரந்தர பச்சை குத்தப்பட்டது.
மற்றொரு பிரபலமான கண்டோன்மெண்ட் பகுதியான சுபது நகரம், கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்திலும், பர்வனூவிலிருந்து இருந்து 39 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வழியாக செல்லும் போது தங்க இடம் என கடந்த காலத்தில் உயர் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வைஸ்ராய் லாட்ஜ் என்ற ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா தலத்தை காணலாம். அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த நகரம், மலையேற்றத்திற்கு ஒரு சிறந்த இடமாகும்.
பயணிகள் விமானம், ரயில், சாலை போன்ற போக்குவரத்து சாதனங்கள் வழியாக எளிதாக பர்வனூவை அடைய முடியும். அருகிலுள்ள விமான நிலையம் 25 கிலோமீட்டர் தொலைவில் சண்டிகரில் உள்ளது.
இது கொல்கத்தா, ஸ்ரீநகர், தில்லி, ஜெய்ப்பூர், மும்பை போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பர்வனூ செல்லும் பன்னாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவ அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் தலைநகர் தில்லியில் அமைந்துள்ளது.
கால்கா ரயில் நிலையம் பர்வனூ நகரத்தின் அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையம் ஆகும். பர்வனூவில் இருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள இந்த ரயில் நிலையம் தில்லி, மும்பை, கொல்கத்தா, மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சண்டிகர் மற்றும் கால்காவிலிருந்து பர்வனூ செல்ல அரசுப் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன.
இந்தப்பகுதியின் காலநிலை வருடம் முழுவதும் இதமாக இருந்தாலும் மே மாதத்தில் மிகவும் வெப்பமாக உள்ளது. மழைக்காலத்தில் இப்பகுதி கணிசமான அளவு மழைப்பொழிவைப் பெறுகிறது. இருப்பினும், குளிர் காலத்தில் - 8°C கும் கீழே செல்வதால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications