மஹாரஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமான இந்த சாங்க்லி நகரம் மஞ்சள் நகரம் என்ற சிறப்புப்பெயரை கொண்டுள்ளது. சாங்க்லி எனும் பெயர் ‘சஹா கலி’ எனும் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. ‘ஆறு பாதை’ என்பது இந்த சொல்லின் பொருளாகும். நாட்டியபண்டரீ எனப்படும் மராத்தி நாடகக்கலையின் பிறப்பிடமாக கருதப்படும் இந்த சாங்க்லி நகரம் ஒரு காலத்தில் அந்த பெயராலேயே அறியப்பட்டுள்ளது.
சாங்க்லி – ராஜவம்ச நகரம்
சாங்க்லி நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு நகரம் 12ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகரமாக விளங்கியுள்ளது. இது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் 11 துப்பாக்கி மரியாதை கொண்ட அரச ராஜ்யங்களில் ஒன்றாக திகழ்ந்திருக்கிறது.
மராத்தா ஆட்சியின்போது இது மராத்தா ஜாகீர்களில் ஒன்றாகவும் விளங்கியிருக்கிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இது பட்வர்தன் ராஜகுடும்பத்தால் ஆளப்பட்டுள்ளது.
சாங்க்லியில் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா அம்சங்கள்
சாங்க்லி நகரம் பல எண்ணற்ற கோயில்கள், பாலங்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களை கொண்டுள்ளது. இங்குள்ள சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. 52 வகையான உயிரினங்கள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. இதற்குள்ளேயே பல கோயில்களும் வழிபாட்டுத்தலங்களும் அமைந்துள்ளன.
சங்கமேஷ்வர் கோயில் மற்றும் கணபதி கோயில் போன்றவை இந்த பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களாக உள்ளன. இவற்றில் முதலாவது கோயில் சிவன் கோயிலாகவும், இரண்டாவது கோயில் கருங்கல்லால் உருவாக்கப்பட்டு இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்ததாகவும் உள்ளன.
இந்த இரண்டு கோயில்களுமே முக்கிய சுபதினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம் செய்யும் திருத்தலங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன. சங்கமேஷ்வர் கோயில் ஷ்ரவண மாதத்தின்போது அதிக பக்தர்களை ஈர்க்கிறது.
சாங்கிலியின் இதர முக்கியக் கோயில்களாக காஷிவிஷ்வநாதர் கோயில், ராமலிங்க கோயில் மற்று தத்ததேவா கோயில் போன்றவையும் அமைந்துள்ளன.
இந்த பல்வகை கோயில்களுக்கு நடுவே மீரஜ் தர்க்கா எனும் ஸ்தலமும் பல மதத்தினரும் ஒன்று கூடி வணங்கும் ஆன்மீகத்தலமாக விளங்குகிறது. மேலும் மராத்தா காலத்தில் கட்டப்பட சாங்க்லி கோட்டை ஒரு வரலாற்றுச்சின்னமாக உள்ளது. தற்சமயம் இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குகிறது.
இங்குள்ள தண்டோபா மலை வனச்சரகப் பகுதியில் மலை ஏற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கான இயற்கை அமைப்புகள் உள்ளன.
சாங்க்லி நகரத்தின் விசேஷம்
சாங்க்லி பிரதேசம் ஆசியாவிலேயே மஞ்சள் அதிகம் உற்பத்தியாகும் இடமாக அறியப்படுகிறது. இங்கு மஹாவீர் நகரிலுள்ள ‘ஸ்பைசஸ் எக்ஸ்சேஞ் கார்னர்’ எனும் இடத்திலிருந்து பயணிகள் ஊர் திரும்பும்போது மஞ்சள் வாங்கிச்செல்லலாம்.
இந்த சாங்க்லி நகரம் ஒரு முக்கியமான ‘ஷாப்பிங்க் சென்டர்’ என்பது பிரசித்தமான யாவரும் அறிந்த உண்மை. எல்லாவகை அங்காடிகளும் இங்கு நிறைந்துள்ளன. நகை வாங்க வேண்டுமெனில் இங்குள்ள சரஃப் பஜாருக்கு செல்லலாம்.
கபத் பேத் பகுதியில் ஆயத்த ஆடைகளும் துணி வகைகளும் கிடைக்கின்றன. மாருதி சாலையில் நவீன ரக ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்கலாம். அழகு சாதன பொருட்களும் இங்கேயே கிடைக்கின்றன. மேலும் வசந்த் மார்க்கெட் வளாகத்தில் பலவித உலர் பழங்களும், மீரஜ் மார்க்கெட்டில் இசைக்கருவிகளும் கிடைக்கின்றன.
சாங்க்லி நகரம் மராத்திய இசை மற்றும் நாடகத்துறைகளில் பாரம்பரியமாக சிறந்து விளங்கியுள்ளது. இன்றும் இந்த துறைகள் நல்ல முறையில் கலாரசிகர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதிகம் அனைவராலும் அறியப்படாத மற்றொரு தகவல் பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் இந்த சாங்க்லி நகரில் உதித்துள்ளனர் என்பதாகும். திரு. ஆர். ஆர். பாடீல், ஆஷா போஸ்லே மற்றும் வசந்த்தாதா பாடீல் போன்ற பிரபலங்கள் இந்த சாங்க்லி நகரத்தை சேர்ந்தவர்கள் என்ப்து குறிப்பிடத்தக்கது.
மேலும் சில தகவல்கள்
சாங்க்லி வருடம் முழுவதுமே உஷ்ணமான வறண்ட பருவநிலையை பெற்றுள்ளது. கோடைக்காலத்தின்போது இங்கு வெப்பநிலை 40 டிகிரி வரை உயர்ந்து காணப்படுகிறது.
எனவே கோடைக்காலத்தில் சாங்க்லிக்கு சுற்றுலா மேற்கொள்வது அவ்வளவு உகந்ததல்ல. கோடையின் வெப்பத்திற்கு பிறகு நல்ல மழையைத்தரும் மழைக்காலம் இப்பகுதியில் வரவேற்பைப் பெறுகிறது. இதமான சீதோஷ்ண நிலை இனிமையான சூழல் போன்றவற்றைக்கொண்ட குளிர்காலமே சாங்க்லிக்கு விஜயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
சாங்க்லி நகரத்துக்கு விமானம், ரயில், சாலை போன்ற மூவழி மார்க்கங்களின் மூலமாகவும் எளிதாக பயணிக்கலாம். விமானத்தில் செல்வதென்றால் கோலாப்பூர் விமான நிலையம் அருகில் உள்ளது.
ரயில் மூலமாக எனில் சாங்க்லி ரயில் நிலையம் பல முக்கிய நகரங்களுக்கும் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளது. மும்பை, புனே, ஹைதராபாத், கொச்சி மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலிருந்து மிக எளிதாக ரயில் மூலம் சாங்க்லி நகரத்துக்கு வருகை தரலாம்.
சாலை மார்க்கமாக எனில் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மர்றும் ரத்னகிரி-நாக்பூர் நெடுஞ்சாலை போன்றவை சாலைப்போக்குவரத்துக்கு மிக வசதியாக அமைந்துள்ளன.
இந்த சாங்க்லி எனும் சிறிய நகரம் வளர்ச்சிப்பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. எல்லா சுற்றுலா அம்சங்களுக்கும் அப்பாற்பட்டு இந்த நகரம் புராதன இந்தியாவின் கலாச்சாரப் பின்னணியை காண உதவும் சாளரமாகவும் உள்ளது.
மலைகள் சூழ்ந்த இந்த வணிக நகரமானது சுற்றிப்பார்த்து ரசிக்கவும் பல்வித பொருட்களை வாங்கவும் ஏற்ற நகரம் என்பதால் ஒரு விடுமுறை காலத்தில் இந்த நகரத்துக்கு விஜயம் செய்வது நல்லது. நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புகளை வீணாக்காமல் ஒரு நல்ல இனிமையான சுற்றுலா அனுபவத்தை இந்த சாங்க்லி நகரம் உங்களுக்கு வழங்கும்.



Click it and Unblock the Notifications