முன்னாட்களில் இயற்கையாக ஆங்காங்கு பூத்துச் சிரிக்கும் மலர்ச் செடிகளும், குளங்களும், அழகிய தாவரங்களும் நம் வாழும் சூழ்நிலையின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன.
ஆனால் நாளடைவில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் கட்டும் பொருட்டு குளங்கள் தூர்க்கப்பட்டும், மரங்கள் வெட்டப்பட்டும் இந்த இயற்கை வளங்களை இழக்க நேர்ந்தது.
எனவே இதை ஈடுசெய்யும் நோக்கத்துடன் செயற்கையான தோட்டங்கள் ஆங்காங்கு உருவாக்கப்படுகின்றன. அதேவேளையில் மன்னர் காலத்து தோட்டங்கள் சிலவும் நம்மிடையே இன்று எஞ்சியுள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் காணப்படும் சில குறிப்பிடத்தக்க அழகிய தோட்டங்களை பற்றி காண்போம்.
இந்திரா காந்தி துலிப் தோட்டம், ஸ்ரீநகர்
தால் ஏரிக்கருகில் ஸபர்வான் மலைச்சிகரங்களில் உள்ள இந்திரா காந்தி துலிப் தோட்டம் ஸ்ரீ நகரிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஒரு வார பண்டிகையான துலிப் திருவிழாவிற்காக இந்த இடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த தோட்டத்தில் பூக்களுக்கான பருவத்தில் ஒரே சமயத்தில் 1.3 மில்லியன் துலிப் பூ மொட்டுக்கள் பூக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தோட்டம் ஷாலிமார் தோட்டம், சஸ்ம்-இ-ஷாஹி, நிஷாத் தோட்டம் மற்றும் பிற முகலாய தோட்டங்களுக்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது.
பிருந்தாவன் கார்டன், மைசூர்
காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பூங்காவின் மையத்தில் அமைந்துள்ள சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இக்குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா தோட்டமான ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுபது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில் அழகான மலர் படுக்கைகள், பசுமையான புல் வெளிகள், பலவகையான மரங்கள், பலவடிவங்களில் அமைக்கப்பட்ட நீர் தடாகங்கள், விதம் விதமான நீர் ஊற்றுகள் என்று பல்வேறு எழில் அம்சங்கள் நிறைந்து வழிகின்றன.
படம் : Sunil Nallode
ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீநகர்
ஸ்ரீ நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீ நகரின் புகழ் பெற்ற முகலாய தோட்டங்களில் ஒன்றாகும். ஷாலிமார் என்ற வார்த்தைக்கு 'காதலின் இருப்பிடம்' என்று பொருளாகும். இந்த தோட்டம் ஷாலிமார் பூங்கா, பைய்ஸ் பக்ஷ், சார் மினாரின் தோட்டம் மற்றும் ஃபாரா பக்ஷ் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது. முகலாய மன்னர் ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக 1619-ம் ஆண்டு இந்த தோட்டத்தை உருவாக்கினார். பெர்சியாவில் உள்ள சஹார் பாக் தோட்டத்தின் வடிவத்தை போலவே ஷாலிமார் தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படம் : Hans Nelisse
லால் பாக், பெங்களூர்
லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்' என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது. 240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இந்த பூங்காத்தோட்டத்தின் உள்ளே பீடபூமி போன்ற இயற்கையான பாறை அமைப்பு காணப்படுகிறது. லால் பாக் பாறை என்று அழைக்கப்படும் இது 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
படம் : Augustus Binu
நிஷாத் பூங்கா, ஸ்ரீநகர்
'நிஷாத் பூங்கா' என்ற வார்த்தைக்கு 'மகிழ்ச்சியின் தோட்டம்' என்று அர்த்தமாகும். 1633-ம் ஆண்டு தால் ஏரியின் கிழக்கு கரையில் கட்டப்பட்ட இந்த பூங்காவில் அரிய வகையிலான பூக்கள், சினார் மரங்கள் மற்றும் சைப்ரஸ் மரங்கள் ஆகியவை உள்ளன.
படம் : McKay Savage
தொங்குதோட்டம், மும்பை
மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையான பூங்காவாக தொங்குதோட்டம் அறியப்படுகிறது. இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. இங்கிருந்து அரபிக்கடலின் பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது ஒரு அலாதியான அனுபவம்.
படம்