இந்தியா எண்ணற்ற நூலகங்களை கொண்டிருக்கும் நாடு. அதில், சில சிறப்பு வாய்ந்த நூலகங்களைப் பற்றி சில தகவல்கள் நேட்டிவ் ப்ளானட் வாசகர்களுக்காக :
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை
Photo Courtesy : Wiki-uk
ஆசியாவின் பழமையான நூலகங்களில் இதுவும் ஒன்று. 16'ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் தொடங்கபட்டதுதான் சரஸ்வதி மகால் நூலகம். இவர்களுக்குப்பின் வந்த மராட்டிய மன்னர்களும் நூலகத்தை விரிவுபடுத்தினர். குறிப்பாக புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சரபோஜி இந்தியா முழுதும் உள்ள சமஸ்கிருத ஓலைச்சுவடிகளை இங்கு சேகரித்தார். மேலும், தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலகம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை
Photo Courtesy - Sankar.S
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் இது. 2010'இல் தொடங்கப்பட்ட இந்த நூலகம் ஒரு பெரிய ஐடி அலுவலகத்தின் தோற்றத்தில் உடையது. மொத்தமுள்ள எட்டு தளத்தில் பல பிரிவாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பார்வையில்லாதோர், ப்ரெய்லி முறையில் படிப்பதற்கு 1500க்கும் மேற்பட்ட ப்ரெய்லி புத்தகங்கள் இருக்கிறது. குழந்தை இலக்கியம் சார்ந்த புத்தகங்களுக்கென்று ஒரு பிரிவு; நாளிதழ்கள், பத்திரிகைகள் தமிழ்ப் புத்தகங்களுக்கு, ஆங்கில புத்தகங்களுக்கு என்று பல பிரிவுகள்.
இதுதவிர. பார்வையாளர்கள் தங்களின் புத்தகங்களை கொண்டு வந்து படிப்பதற்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கொல்கத்தா தேசிய நூலகம்
Photo Courtesy : Avrajyoti Mitra
இங்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தின் பழைய பெயர் இம்பீரியல் நூலகம். 1953'இல்தான் இதற்கு தேசிய நூலகம் என்ற பெயர் வந்தது. அரிய புத்தகங்களும், எண்ணற்ற ஆவணங்களும் இங்கு இருக்கின்றன.
நூலகத்தின் பிரதான ஹாலில் வாசகர்கள் படிப்பதற்கு சிறப்பு அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.
ஶ்ரீவில்லிப்புத்தூர் பெனிங்க்டன் பொது நூலகம்
ஶ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோவில், பால் கோவா இதற்கடுத்து அதிக பிரபல்யமாக இருப்பது இந்த நூலகம். மற்ற நூலகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம். மற்றவை எல்லாம் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் நூலகங்கள், பெனிங்க்டன் பொது நூலகம் தனியாரால் நடத்தப்படுகிறது. குறைந்த உறுப்பினர் கட்டணம், ஏராளமான புத்தகங்கள் என்று எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் இந்த நூலகத்தை பராமரித்து வருகின்றனர்.
கர்நாடகம் மாநில மத்திய நூலகம், பெங்களூர்
Photo Courtesy : Kamran Ahmed
கப்பன் பூங்காவிற்கு அருகில் ஒரு பிரமாண்ட செந்நிற கட்டிடமாய் இருக்கிறது இந்த நூலகம்; பல மொழிகளில், 3 லட்சம் புத்தகங்கள் மேல் இங்கு இருக்கிறது. இந்தியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்று.
கேரள மாநில மத்திய நூலகம், திருவனந்தபுரம்
Photo Courtesy : Ajeeshcphilip
இந்தியாவின் முதல் பொது நூலகம் இது. கி.பி. 1829'இல் திருவாங்கூர் அரசர், ஸ்வாதி திருனாள் காலத்தில் நிறுவப்பட்ட நூலகம்.
ஆங்கிலம், மலையாளம், தமிழ், ஹிந்தி என்று பல பிரிவுகளில் 4 லட்சம் நூலக்ள் இருக்கின்றன. டிஜிட்டல் முறையில் புத்தகங்களைப் படிப்பதற்கு வசதிகள் இருக்கின்றன. மாதம், சராசரி 50,000 வாசகர்களை ஈர்க்கும் நூலகம்.