கர்நாடகத்தின் குடகு (கூர்க்) மாவட்டத்திலுள்ள தலைக்காவேரி என்னும் இடத்தில் பிறக்கும் காவிரி ஆறு ஒரு குழந்தையை போல தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தேடிவரும் அழகே அழகுதான்.
அப்படி அது பாயும் இடங்களெல்லாம் பச்சை பசேலென்று பச்சை பட்டாடை உடுத்தியதுபோல் வளமையோடு காணப்படுவதால் 'பொன்னி நதி' என்று தமிழக மக்கள் அதை செல்லமாக அழைக்கிறார்கள்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகரும், தமிழகத்தில் மேட்டூர் அணையும் முக்கியமானவை.
அதேபோல கர்நாடகாவிலுள்ள இந்தியாவின் 2-வது பெரிய அருவி ஷிவனசமுத்ராவும், தமிழ்நாட்டின் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள அருவிகள்.
மேலும் கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா, ஷிவனசமுத்ரா தீவுகளையும், தமிழகத்தில் ஸ்ரீரங்கம் தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.
இப்படியாக தலைக்காவேரியில் பிறந்து பல அணைகளை கடந்து, அருவிகளாய் விழுந்து, பொங்கிப் பாய்ந்து செல்லும் காவிரி ஆறு பூம்புகாரில் கடலோடு சங்கமமாகிறது.
அது கடந்து செல்லும் பாதைகளில் எத்தனை எத்தனை அற்புதங்கள், எப்பெயர்பெட்ட புண்ணிய ஸ்தலங்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன!

தலைக்காவேரி
காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்.வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தீர்த்தவாரியிலிருந்து நீர் (காவேரி) ஊற்றாக வெளிப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதை தரிசிப்பதற்கு இங்கு கூடுகின்றனர். இந்நிகழ்வு ஒரு திருவிழாவாக இந்த ஸ்தலத்தில் கொண்டாடப்படுவதோடு ஆயிரக்கணக்கான விளக்குகள் அச்சமயம் இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படுகின்றன.

பாகமண்டலா
காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.

குஷால்நகர்
காவிரிக் கரையோரம் வீற்றிருக்கும் குஷால்நகருக்கு அருகில் திபெத்திய குடியிருப்பான பைலாகுப்பே, தங்கக்கோயில், ஹரங்கி அணை, துபாரே யானைகள் முகாம் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. எனவே குஷால்நகருக்கு வந்தால் நீங்கள் உங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் 'குஜாலாக' பொழுதை கழிக்கலாம்!

ஸ்ரீரங்கப்பட்டணா
காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம். மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம், ஸ்ரீரங்கப்பட்டண சங்கமம் அல்லது முக்கூடல் என்று அழைக்கப்படும் காவேரி - கபினி - ஹேமாவதி ஆறுகள் கூடும் ஸ்தலமாக திகழ்கிறது. இந்நகரில் உள்ள 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.

கிருஷ்ணராஜசாகர்
காவிரி நதியின் குறுக்காக கட்டப்பட்ட அணைகளிலேயே மிகவும் பெரிய அணையாக அறியப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைக்காக கிருஷ்ணராஜசாகர் நகரம் புகழ்பெற்றுள்ளது. அதோடு அதன் பெயருக்கு ஏற்றார் போலவே பிரம்மாண்டமாக கடல் போல் காட்சியளிக்கும் கிருஷ்ணராஜசாகர் அணையின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பிருந்தாவன் கார்டனும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஷிவனசமுத்ரா
காவிரி ஆற்றின் இரட்டை அருவியான ஷிவனசமுத்ரா உலகின் 100 முக்கிய அருவிகளில் ஒன்றாக அறியப்பட்டுள்ளது. காவிரி ஆறு இங்கு ‘ககனசுக்கி' மற்றும் ‘பரச்சுக்கி' எனும் இரண்டு கிளைகளாக பிரிகிறது. இப்படி பிரியும் காவிரி ஆற்றின் இந்த இரண்டு கிளைகளும் ஆர்ப்பரிப்புடன் 322 அடி உயரத்திலிருந்து அருவியாய் விழுகின்றன!

திருமுக்கூடல் நரசிபுரம்
மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமுக்கூடல் நரசிபுரம் என்ற இந்த இடத்தில் காவிரி மற்றும் கபினி நதிகளுடன் ஸ்படிக சரோவர் எனும் கண்ணுக்கு புலப்படாத புராண காலத்து ஏரியும் ஒன்று கூடுவதாக நம்பப்படுகிறது. இந்த இடம் ஸ்கந்த புராணத்தில் திருமுக்கூடல் ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்பட்டுள்ளது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தலக்காடு
ஒரு காலத்தில் 30-க்கும் மேற்பட்ட கோயில்களை கொண்ட நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16-ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது. காவேரி ஆறு இந்த நகரத்தின் வழியாக ஒடுவதுடன் இங்கு ஒரு திடீர் வளைவையும் தன் பாதையில் கொண்டுள்ளது. எனவே இந்த காவிரிக்கரையிலிருந்து தெரியும் இயற்கைக்காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையு

மேட்டூர்
மேட்டூர் என்ற வார்த்தை தமிழக விவசாயிகளின் ஏக்கம், துக்கம், சந்தோஷம் என்று அனைத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகம் நீருக்காக மேட்டூர் அணையை நம்பியிருப்பது போல, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் நீர் மின்சார திட்டம் தமிழகத்தின் கணிசமான மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணை கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து நீரை பெறுகிறது.

ஈரோடு
காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் நகரங்களில் ஈரோட்டுக்கு ஒரு தனி இடமுண்டு. காவிரியின் கிளை நதியான பவானி ஆறும் இங்கே பாய்ந்தோடுவதோடு, அதன் மீது கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணைக்கட்டும், கொடிவேரி அணைக்கட்டும் மிகவும் புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

திருச்சிராப்பள்ளி
காவிரி ஆற்றையும், திருச்சிராப்பள்ளி நகரையும் வேறு வேறாக என்றுமே பார்க்க முடியாது. எகிப்திலும், கிரேக்கத்திலும் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட அணைகள் அழிந்துபோக நம்முடைய கரிகாலன் கட்டிய கல்லணை மட்டும் இன்றும் நம் மண்ணின் பெருமையாக கம்பீரமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. திருச்சி நகரத்தையே வளம் கொழிக்க செய்தவாறு காவிரித்தாய் புன்னகை தவழ பாய்ந்தோடுகிறாள்!

திருவையாறு
காவிரி ஆறு இங்கு குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று 5 கிளைகளாக பிரிவதால் திரு+ஐந்து+ஆறு என்ற பொருளில் இவ்விடம் திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. அதோடு உலகத்தின் மிகச் சிறந்த இசை கலைஞர்கள் பங்குபெறும் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் திருவையாறு காவிரிக் கரையோரத்தில் நடைபெறுவது உலகப் பிரசித்தம்.

தஞ்சாவூர்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும், கலை பிறந்த இடமாகவும் போற்றப்படும் தஞ்சாவூர் மண்ணின் இரத்தத்தை போல காவிரி நதி பாய்ந்துகொண்டிருக்கிறது. தஞ்சாவூரில் பொன்னி நதி என்ற செல்லப் பெயருடன் அனைவராலும் போற்றப்படுகிறது காவிரி நதி. இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான சோழப் பேரரசின் தலைநகரமாகவும் தஞ்சாவூர் நகரம் திகழ்ந்து வந்தது. மேலும் மாமன்னர் ராஜராஜ சோழன் குழந்தை பருவத்தில் இங்கு பொன்னி நதியில் ஒரு முறை விழுந்து உயிர் பிழைத்ததாகவும், அதன் காரணமாக அவர் பொன்னியின் செல்வன் என்ற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பூம்புகார்
தலைக்காவேரியில் பிறப்பெடுத்த காவிரித்தாய் கடலில் கலக்கும் இடமாக பூம்புகார் நகரம் அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'காவிரி ஆறு கடலில் புகும் இடம்' என்ற பொருளில் 'புகும் ஆறு' என்பதே காலப்போக்கில் புகார் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications







