எல்லா இளம் பெண்களுக்குமே அப்பா, அண்ணன், குடும்பம் என்ற எந்த வித துணையும் இல்லாமல் தங்கள் தோழிகள் கூட்டத்தோடு தனியாக ஒரு டூர் போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பல வீடுகளில் அதற்கு அனுமதி கொடுப்பது இல்லை! காரணம் நீங்கள் பாதுகாப்பான இடங்களை (Safe destinations) தேர்ந்தெடுப்பது இல்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பான சுற்றுலாவை வழங்குவதில் இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்கள் வெற்றி கண்டு வருகிறது. நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு எல்லாம் சென்றால் எந்த வித கவலையும் இல்லாமல் ஆனந்தமாக பாதுகாப்பாக சுற்றுலாவை என்ஜாய் பண்ணலாம். அவை என்னென்ன இடங்கள் என்று பார்ப்போமா!

கோவா
பெண்கள் தனியாக பாதுகாப்பாக ட்ரிப் போக வேண்டிய இடங்களில் முதல் இடத்தில் இருப்பது கோவா. வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கோவா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒரு சுற்றுலாத் தலமாகும். கோவாவின் பல வண்ணமயமான கடற்கரைகளில் ஓய்வெடுப்பது, பாகாவில் இரவு விருந்து, பப்களில் நடனம், பிளே மார்க்கெட்டில் ஷாப்பிங், கடற்கரை சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது, பஞ்சி ஜம்பிங் செய்வது என கோவாவில் பொழுதுபோக்குகள் ஏராளம். நீங்கள் பெண்களாக தனியாக கோவாவிற்கு ட்ரிப் சென்றால் கட்டாயம் வேற லெவலில் என்ஜாய் பண்ணுவீர்கள்.

பாண்டிச்சேரி
இந்த பட்டியலில் கோவாவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது சென்னைக்கு மிக அருகிலேயே இருக்கும் பாண்டிச்சேரி தான். வார இறுதியில் நீங்கள் புதுவைக்கு சென்று பார்த்தால் நீங்களே தெரிந்துக் கொள்வீர்கள். புதுவையின் எந்த பக்கம் திரும்பினாலும் இளம் வயதினர் கூட்டமே உங்களுக்கு தென்படும். பிரெஞ்சு கலாச்சாரம், காலனித்துவ கட்டிடக்கலை, அழகிய கோவில்கள், பல நாடுகளின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் தேவாலயங்கள், துடிப்பான இரவு கலாச்சாரம், பப்கள், கஃபேக்கள் என இளம் வயதினரை இழுக்கிறது புதுச்சேரி. இந்த இடத்திற்கு பெண்கள் எந்தவித பயமுமின்றி பிரயாணிக்கலாம்.

கூர்க் (எ) குடகு
காபி தோட்டங்களின் வாசனை, பசுமையான காடுகள், வலிமையான மலைகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், பழங்கால கோட்டைகள், மேகங்களுக்குள் நடைபயணம் என இவை அனைத்தையும் நீங்கள் கர்நாடகாவின் கூர்க்கில் அனுபவிக்கலாம். கூர்க்கின் புகழ்பெற்ற காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு மத்தியில் நீங்களும் உங்கள் தோழிகளும் முகாமிட்டு தங்கலாம். உங்களால் திட்டமிட முடிந்தால், உள்ளூர் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் உணர்வைப் பெற புத்தாரி திருவிழாவை உங்கள் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சிம்லா
ஆண்டின் எல்லா நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிம்லா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகும். சிம்லாவின் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் அதன் இயற்கை அதிசயங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். பனி பொழியும் வானிலை, பனி விளையாட்டுகள், துடிப்பான கலாச்சாரம், காலனித்துவ கட்டிடக்கலை, ஸ் ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் இன்னும் பல சிலிர்ப்பான செயல்களில் நீங்கள் இங்கே ஈடுபடலாம்.

பெங்களூர்
இந்தியாவின் தொழில்நுட்ப பூங்காவான பெங்களூரு இருபத்தி நான்கு மணி நேரமும் மிகவும் பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தாலும், அங்கே வசிப்பவர்களுக்கும் பெங்களூருவிற்கு வருகை தரும் கூட்டத்திற்கும் ஒரு இனிமையான சுற்றுலாவை வழங்குகிறது. பெங்களூருவின் கஃபேக்களும், ஹோட்டல்களும், பிக்னிக் ஸ்பாட்டுகளும் தென்னிந்தியாவிலேயே மிகவும் பேமஸ். குறிப்பாக இங்கு பெண்கள் நடு இரவில் கூட வெளியே போகலாம், எந்த பிரச்சினையும் ஏற்படுவது இல்லை.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்
உயரமான பனை மரங்கள், நீண்ட வெள்ளை மணல், படிக தெளிவான மரகத நீர் மற்றும் பவளப்பாறைகள் என அந்தமான் உங்களை வேறு உலகிற்கே அழைத்து சென்று விடும். இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றான அந்தமானின் ஹேவ்லாக் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரைக்கு உங்கள் தோழிகளுடன் கடல் வழியாக பயணம் செய்யுங்கள். ஸ்நோர்கெல்லிங், ஸ்கூபா டைவிங் செய்து மகிழ்ந்திடுங்கள். பிரத்யேகமான அந்தமான் உணவுகளை ருசித்து மகிழ்ந்திடுங்கள். மொத்தத்தில் கம்மி விலையில் மாலத்தீவு சுற்றுலா சென்று வந்ததற்கான அனுபவம் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

கேரளா
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் மலைகள், அமைதியான உப்பங்கழிகள், அடர்ந்த காடுகள், அழகிய நீர்வீழ்ச்சிகள் என கேரளா அதன் இயற்கை அழகில் உங்களையும் உங்கள் தோழிகளையும் மயக்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக கேரளா பெண்களுக்கான பாதுகாப்பான சுற்றுலாவை வழங்குகிறது. நீங்கள் தாரளமாக கேரளாவின் மூணாறு, தேக்கடி, ஆலப்புழா, கொச்சி என எந்த இடத்திற்கும் தாரளாமாக ட்ரிப் பிளான் பண்ணலாம்.

மணாலி
தனியாக, கூட்டமாக என எப்படி வேண்டுமானாலும் நீங்கள் மணாலிக்கு ட்ரிப் பிளான் பண்ணலாம். பியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த அழகிய மலை நகரம், பெண்களுக்கு ஒரு சரியான பயணத்தை வழங்குகிறது. ஆற்றில் ராஃப்டிங் செய்து மகிழுங்கள், நகரத்தின் பழைய பகுதியை ஆராயுங்கள், மலையேற்றங்களுக்கு செல்லுங்கள். ஹடிம்பா தேவி கோயில், மனு கோயில், சோலாங் பள்ளத்தாக்கு, ரோஹ்தாங் கணவாய், மணாலி சரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்ல மறக்காதீர்கள். நீங்கள் உங்கள் பெண் தோழிகளுடன் இந்த இடங்களில் எந்த இடத்திற்கு ட்ரிப் பிளான் பண்ண இருக்கிறீர்கள்?



Click it and Unblock the Notifications












