பனிப்பொழிவில் நனைந்து, பனிக்கட்டியில் விளையாடி, ஸ்னோமேன் உருவாக்க நம்மில் எல்லோருக்குமே ஆசை உண்டு. பனியில் சறுக்கி விளையாடி, பனிப்பந்துகளை உருவாக்கி நண்பர்கள் மேல் வீசி மகிழும் போது நம்முள் இருக்கும் குழந்தை வெளியே எட்டி பார்க்கும். இந்தியாவில் பிரமிக்க வைக்கும் பனிப்பொழிவு ஸ்பாட்டுகளுக்கு பஞ்சமே இல்லை. குளிர்காலம் தொடங்கும் போது, வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் அழகிய மலைகளின் மேல் ஒரு பளபளப்பான பனி அடுக்கு சேர்க்கிறது. அதைக் காணுவதற்காகவே பல சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடுகின்றனர்!

குல்மார்க், ஜம்மு & காஷ்மீர்
சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் சிறந்த பனிப்பொழிவு இடங்களில் குல்மார்க் முதலிடம் வகிக்கிறது. பனி மூடிய நிலப்பரப்புகள், உறைந்த ஏரிகள் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் கொண்ட குல்மார்க், நீங்கள் இதுவரை கண்டிராத வேறு எந்த இடத்திலும் இல்லாத வசீகரத்தைக் கொண்டுள்ளது. பனிச்சறுக்கு மற்றும் ஸ்னோபோர்டிங் போன்ற சாகச விளையாட்டுகளுடன் குல்மார்க் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

நைனிடால், உத்தரகாண்ட்
மகத்தான இயற்கை அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்ட நைனிடால் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. பனிப்பொழிவை ரசிக்க விரும்பும் உங்களை ஏரிகள், வியூபாயின்ட்கள், அழகிய சுற்றுலாத்தலங்களோடு நைனிடால் வரவேற்கிறது. அமைதியான நீர்நிலைகள், பசுமையான தோட்டங்கள், , பூத்துக் குலுங்கும் பூக்கள் என நைனிடால் முழுவதும் பனி படர்வதை பார்த்து நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.

யும்தாங், வடக்கு சிக்கிம்
யும்தாங் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் பனியைப் பெறுவதாக கூறப்படுகிறது. அதுவும் குளிர் காலத்தில் அடர்ந்த பனிப்பொழிவை பெறுகிறது. காங்டாக் மற்றும் லாச்சுங்கிற்குச் செல்பவர்கள் இந்த இடத்தில் ஒரு நாள் தங்குவது சிறப்பாகும். இங்குள்ள அற்புதமான இயற்கைக்காட்சிகளை ரசிப்பதோடு, பனியிலும் ஆனந்தமாக விளையாடலாம்.

தவாங், அருணாச்சல பிரதேசம்
வானை முட்டும் பனி மூடிய மலைகள், ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அடர்ந்த காடுகள் என தவாங் வடகிழக்கில் ஒளிந்து இருக்கும் ஒரு இயற்கை அதிசயமாகும். இயற்கை எழில் கொஞ்சும் அழகைத் தவிர, இது 400 ஆண்டுகள் பழமையான மடாலயத்தைக் கொண்டுள்ளது, எனவே இது இந்தியா முழுவதும் உள்ள புத்த மதத்தினரின் புனித யாத்திரைக்கான முக்கிய மையமாகும்.

மணாலி, இமாச்சல பிரதேசம்
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மலைவாசஸ்தலங்களில் மணாலியும் ஒன்றாகும், மேலும் இந்தியாவின் சிறந்த பனிப்பொழிவு இடங்களின் பட்டியலில் அதன் பெயரை நீங்கள் காணலாம். மரகத புல்வெளிகளும், வளைந்து நெளிந்து செல்லும் பியாஸ் நதியும், குளிர்ந்த இமயமலைக் காற்றும் உங்களை வேறு உலகத்திற்கே கொண்டு செல்லும். ஆண்டு முழுவதும், மலை வாசஸ்தலத்தைச் சுற்றி மலையேற்றம், பாராகிளைடிங் மற்றும் பல சாகச விளையாட்டுகளும் மேற்க்கொள்ளப்படுகின்றன.

லடாக்
பனி படர்ந்த மலைகள், வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகள், பல நூற்றாண்டுகள் பழமையான மடங்கள், பல பாஸ்கள் என லடாக் பல வித்தியாசமான ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது. குளிர்காலம் வரும்போது, பளபளக்கும் வெள்ளை பனி, அந்த இடத்தின் அழகை பல படிகள் உயர்த்துகிறது என்றே கூற வேண்டும்.

சிம்லா, இமாச்சல பிரதேசம்
புது தில்லியிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள சிம்லா, பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகாலத் தலைநகராக விளங்கிய இந்த மலைவாசஸ்தலம், அதன் சுவாரசியமான கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் பல சுவாரசியமான இடங்களைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பனியில் சறுக்கி விளையாடி பல அற்புதமான நினைவுகளை உருவாக்கலாம்.
மேலும், ஜம்மு & காஷ்மீரின் சோன்மார்க், பட்னிடோப், பஹல்காம், உத்தரகாண்ட்டின் ஆலி, அல்மோரா, முன்சியாறி, இமாச்சலின் டல்ஹெளசி, காஜ்ஜியார் ஆகிவையும் இந்தியாவில் உள்ள சிறந்த பனிப்பொழிவைப் பெறும் இடங்களாகும்.



Click it and Unblock the Notifications







