ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. ‘ரண்’ மற்றும் ‘தம்போர்’ எனும் இரண்டு மலைகளுக்கிடையே அமைந்திருப்பதால் இந்த இடத்துக்கு ரணதம்போர் எனும் பெயர் வந்துள்ளது.
சர்வதேச பிரசித்தி பெற்ற ‘புலிகள் சரணாலயம்’
புலிகள் சரணாலயத்திற்கு உலகப்புகழ் பெற்று விளங்குவதுடன் ‘ரணதம்போர் தேசிய காட்டுயிர்ப்பூங்கா’ விற்காகவும் ரணதம்போர் ஸ்தலம் இந்தியாவில் சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட ஒரு இடமாக விளங்குகிறது. இந்த காட்டுயிர்ப்பூங்கா ஆரவல்லி மலைகளுக்கும் விந்திய பீடபூமிக்கும் இடையில் அமைந்துள்ளது.
‘சவாய் மாதோபூர் வேட்டை வனப்பகுதி’ என்ற பெயரில் இது 1955ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் துவங்கப்பட்டது. பின்னர் 1973ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு சரகமாக அறிவிக்கப்பட்டு இறுதியாக 1980ம் ஆண்டில் இது தேசிய காட்டுயிர் பூங்கா எனும் சிறப்பை பெற்றது.
இலையுதிர் காடுகளைக் கொண்டுள்ள ரணதம்போர் காட்டுப்பிரதேசமும் அதன் சுற்றுப்புறமும் பல்வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்களால் நிரம்பியுள்ளன. எண்ணற்ற விலங்குகள் மற்றும் பறவைகள் இப்பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளன.
சாம்பார் மான், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கரடிகள், வரிக்கழுதைப்புலிகள் மற்றும் பலவகை விலங்குகளை இங்கு பயணிகள் பார்க்கலாம். பதாம் தலாவ், சுர்வால் தலாவ் மற்றும் மாலிக் தலாவ் போன்ற ஏரிகளும் இங்கு காணப்படுகின்றன. இவற்றில் பதாம் தலாவ் என்பது ஒரு பெரிய ஏரியாகும். இதன் கரையில் ஜோகி மஹால் எனும் புராதன மாளிகையும் அமைந்துள்ளது.
ரணதம்போர் கோட்டை – ஒரு கட்டிடக்கலை அதிசயம்
ரணதம்போர் ஸ்தலத்தின் மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் 944 ம் ஆண்டைச்சேர்ந்த ரணதம்போர் கோட்டையாகும். ராஜஸ்தான் மாநிலத்தின் வீரப்பாரம்பரியம் மற்றும் பல வரலாற்றுப் பின்னணிகளின் மகுடமாக இந்த ரண்தம்போர் கோட்டை கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.
சுற்றியுள்ள பீடபூமிப்பகுதியிலிருந்து 700 அடி உயரத்தில் பரந்த நிலப்பரப்பில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிவன் கோயில், விநாயகர் கோயில் மற்றும் ராமர் கோயில் ஆகிய கோயில்களை இந்த கோட்டைக்குள் தரிசிக்கலாம். இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இந்த கோட்டை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மஹோன்னத வரலாற்றுப்பின்னணி
ரணதம்போருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் இயற்கையை அதன் இயல்போடு ஒன்றி ரசித்து மகிழலாம். ரம்மியமான இயற்கைக்காட்சிகள், பரந்த புல்வெளிகள், பெருக்கெடுத்தோடும் ஓடைகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் சிகரங்களுக்கிடையில் காணப்படும் ஆழமான பள்ளத்தாக்குகள் என பலவகையான இயற்கை அம்சங்கள் இங்கு நிரம்பியுள்ளன.
இவை தவிர சிதிலமடைந்த மண்டபங்கள், கோட்டைச்சுவர்கள், கோட்டைகள் போன்ற வரலாற்று கால ராஜரீக அம்சங்களின் மிச்சசொச்சங்களை பல வடிவங்களிலும் தோற்றங்களிலும் ரணதம்போர் பிரதேசத்தில் பார்த்து ரசிக்கலாம். புத்துணச்சியூட்டும் ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை ரண்தம்போர் ஸ்தலம் பயணிகளுக்கு அளிக்கிறது எனும் உண்மை பிரசித்தமாக அறியப்படுகிறது.
பயண வழிகள்
ரணதம்போர் சுற்றுலாத்தலத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் மற்றும் சவாய் மாதோபூர் ரயில் நிலையம் ஆகியவை முறையே ரண்தம்போருக்கு அருகிலுள்ள விமானத்தளமாகவும் ரயில் நிலையமாகவும் அமைந்துள்ளன.
வருடமுழுதும் மிதமான பருவநிலையை ரண்தம்போர் பிரதேசம் பெற்றுள்ளது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையான இடைப்பட்ட காலத்தில் பருவநிலை இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிப்பதால் இப்பருவத்தில் ரணதம்போருக்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications