பெங்களூர் என்றாலே வளர்ந்த தொழில் நகரம், எங்கு பார்த்தாலும் உயரமான தொழில் வளாகக் கட்டிடங்கள், உலகத் தரம் வாய்ந்த மால்கள், மெட்ரோ சிட்டி என பரபரப்பான தலங்களே நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால், பெங்களூரின் மறுபக்கம் இதற்கு அப்படியே நேர் எதிரானது. எல்லைப் பகுதிகளில் இயற்கை பசுஞ்சூழலும், பனி படரும் மலைப் பிரதேசங்களும், கொட்டும் அருவிகளும் என பல சுற்றுலா அம்சங்களையும் இது கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து இங்கே தொழில் நிமித்தமாகவும், சுறுலாவிற்காகவும் வரும் பயணிகள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் சுற்றி ரசித்து விட்டுத் திரும்புவர். அடுத்த முறை இங்கே பயணம் மேற்கொண்டால் தவராமல் பெங்களூரின் இந்த அருவிகளுக்கு எல்லாம் சென்று பாருங்கள். இந்நகரம் குறித்தான உங்கள் எண்ணம் மாறிவிடும்.
சுஞ்சி அருவி
பெங்களூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும், மைசூரில் இருந்து 102 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது சுஞ்சி நீர்வீழ்ச்சி. காவிரியின் கிளை நதியாக பிரிந்து வரும் அர்காவதி ஆற்றின் பகுதியில் தான் இது அமைந்துள்ளது. சாலை மார்க்கமாக சர்ச் காலனி வரை சென்று அங்கிருந்து பரிசலில் பயணிக்க வேண்டும். அருவியை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகள் அருவிக்கு மேலும் அழகூட்டுகின்றன. தற்போது மழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில் சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.
மேகதாது நீர்வீழ்ச்சி
பெங்களூரில் இருந்து 100 கிலோ மிட்டர் தொலைவில் சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு அடுத்துள்ள மற்றுமொரு அழகிய அருவி தான் மேகதாது அருவி. முகுரு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இது காவிரி ஆற்றின் கிளையில் உள்ள, மேகதாது அருவி என்று அழைக்கப்படுகிறது. இதனருகிலேயே மேகதாது பள்ளதாக்கும் உள்ளது. மலையேற்ற சாகச விரும்பிகளுக்கு இது சிறந்த தலமாகும். இருப்பினும், தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் கோடை காலத்தில் வருவது நல்லது.
அப்பே நீர்வீழ்ச்சி
பெங்களூரில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில், மேற்த தொடர்ச்சி மலையை ஒட்டிய கூர்கில் அமைந்துள்ளது அப்பே நீர்வீழ்ச்சி. மலைக் காடுகளில் வழிந்தோடி வரும் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து உயரமான பாறைகள் மீது வழிந்து சிதறும் இந்நீர்வீழ்ச்சி நிச்சயம் காண்போரை திகைத்திடச் செய்திடும்.
இருப்பு நீர்வீழ்ச்சி
பெங்களூரில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த இருப்பு நீர் வீழ்ச்சி. காவிரியின் துணை ஆறான லட்சுமண தீர்த்த ஆ;றறில் இருந்து இது உருவாவதால் இதற்கு லட்சுமண தீர்த்த நீர் வீழ்ச்சி என்ற பெயரும் உள்ளது. அறுபது அடி உயரத்தில் பசுமையான மலைப்பகுதியின் மத்தியில் விழும் நீர்வீழ்ச்சி இயற்கையின் அத்தனை அழகையும் கொண்டுள்ளது.
சிவானசமுத்ரத்திரா
பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திரா நீர்வீழ்ச்சியை அடைய தடாகுனி, கனகப்புரா, மாலவள்ளி வழியாக சுமார் 131 கிலோ மிட்டர் பயணித்தால் நீர்வீழ்ச்சியை அடைந்து விடலாம். மாண்டியா மாவட்டத்தில் உள்ள பல ஓடைகளைக் கொண்டு காவேரி நதியால் இந்த உருவாகிறது. தீவு நகரமான சிவானசமுத்ரா, இரு பிரிவுகளாக பிரிந்திருக்க அவை ககனசுக்கி மற்றும் பராசுக்கி எனவும் அழைக்கப்படுகிறது.
ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி
பெங்களூரில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் குதுரேமுக் என்னும் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசத்தில் உள்ளது ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி. சுமார் நூறடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்நீர்வீழ்ச்சி கர்கலா அணை மற்றும் லக்யா அணைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. அமைதியான இயற்கைப்பிரதேசத்தை கண்டு ரசிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும்.