இந்தியாவின் தேசிய மரமாக விளங்கி வரும் ஆலமரம்தான் மரங்களிலேயே அதிக அகலத்தில் வளரக்கூடியது. இதன் காரணமாகவே 'அகன்ற' எனும் பொருள் தரும்படி 'அகல்மரம்' என்று அழைக்கப்பட்டு வந்த இது நாளடைவில் மருவி ஆலமரம் என்றானது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாது என்பதோடு விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது ஆலமரம். அந்தக் காலங்களில் மன்னர்கள் நட்டு வளர்த்த ஆலமரங்களின் நன்மைகளை இன்று நாம் அனுபவித்து வருகிறோம். இந்தியாவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சில குறிப்பிடத்தக்க ஆலமரங்களை பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைக்கும்போது சென்று வாருங்கள். புத்தர் ஞானம் பெற்ற மரமாக கருதப்படும் ஆலமரத்தின் அடியில் உங்களுக்கும் ஞானம் கிட்டலாமல்லாவா?!
அடையாறு ஆலமரம்
அடையாறு ஆலமரம் என்று மிகவும் பிரபலமாக அறியப்படும் இந்த ஆலமரம் சென்னை அடையாற்றில் உள்ள தெஸோஃபிக்கல் சொசைட்டியில் (பிரம்ம ஞான சபை) அமைந்திருக்கிறது. 450 ஆண்டுகள் பழமையான இந்த கிழட்டு ஆலமரப் பகுதியில் அந்தக் காலத்தில் அன்னிபெசன்ட், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன.
எப்படி செல்லலாம்?
சென்னை எழும்பூரிலிருந்து 11கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலமரம். அடையாற்றில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு, எழும்பூரிலிருந்து பேருந்து மூலமாகவோ, வாடகை கார், ஆட்டோ மூலமாகவோ செல்லமுடியும்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
பெசன்ட் நகர் பூங்கா, அடையாறு தீவு, வேல் தீவு, அடையாறு உடைந்த பாலம், தொல்காப்பியர் பூங்கா என அருகில் நிறைய இடங்கள் அமைந்துள்ளன.
திம்மம்ம மர்ரிமனு
திம்மம்ம மர்ரிமனு எனும் இந்த இராட்சஸ ஆலமரம் 1989-ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஆலமரமாக கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. இந்த மரம் ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது 200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. படம் : Abdulkaleem md
எப்படி செல்வது
அனந்தபூர் மாவட்டத்தில் காதிரியிலிருந்து 25கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். மேலும் தமிழக ஆந்திர எல்லையான சித்தூரிலிருந்து 4 மணி நேர பயணதூரத்தில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
திருப்பதி, காலஹஸ்தி, புட்டபர்த்தி, பழவேற்காடு ஏரி உள்ளிட்டவை இதைச் சுற்றியுள்ள இடங்களாகும்.
தொட்ட ஆலத மர
கன்னட மொழியில் 'தொட்ட ஆலத மர' என்று அழைக்கப்படும் இந்த இராட்சஸ ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் பெங்களூரின் கெட்டோஹள்ளி என்ற கிராமப்பகுதியில் 3 ஏக்ரா இடத்தை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இது 2000-ல் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது பல்வேறு மரங்கள் போல் தோற்றமளிக்கிறது. பெங்களூர்வாசிகளுக்கு மிகச் சிறந்த பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வரும் இந்த ஆலமரம் இருக்கும் இடத்திற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்தும், கே.ஆர். மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலாத் துறை இந்த இடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு உணவகமும் ஏற்படுத்தியுள்ளது.
எப்படி செல்லலாம்
பெங்களூவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலமரம். பெங்களூருவின் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்றாகும்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
முக்தம்மா கோயில், முக்தி நாக கோயில், முக்காத்தம்மா கோயில், கங்கம்மா கோயில், சனீஸ்வரா கோயில் ஆகியன இதற்கு அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களாகும்.
பிள்ளல மர்ரி
3 ஏக்ரா பரப்பளவுக்கு பரந்து காணப்படும் இந்த ஆலமரம் ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹ்பூப்நகரில் அமைந்துள்ளது. இந்த இராட்சஸ ஆலமரம் 800 ஆண்டுகள் பழமையானது.
எப்படி செல்லலாம்
ஹைதரபாத்திலிருந்து 2 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். 131கிமீ தூரம் பயணித்தால் எளிதில் இந்த பூங்காவை அடைந்துவிடலாம். இதன் அருகே ஏரியும் அமைந்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தவிசயமாகிறது.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
இந்த இடத்தைச் சுற்றி நிறைய கோயில்கள் அமைந்துள்ளன. மூச்குண்டா ஏரியிலிருந்து ஆறும் பாய்கிறது. ஸ்ரீபரவதிதிம்மா மகேஷ்வரா என்கிற கோயில் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஹௌரா இராட்சஸ ஆலமரம்
330 மீட்டர் சுற்றளவில் அந்தப் பகுதியே குளோனிங் செய்யப்பட்டு நடப்பட்ட ஆலமரங்களை போல் காட்சியளிக்கும் இந்த இராட்சஸ ஆலமரம் கொல்கத்தா நகருக்கு வெகு அருகில் ஹௌராவில் உள்ள ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிக்கல் கார்டனில் அமைந்துள்ளது. இது 250 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. படம் : Biswarup Ganguly
எப்படி செல்லலாம்?
கொல்கத்தாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள அவுராவில் அமைந்துள்ளது இந்த பெரிய ஆலமரம். அவுராவிலிருந்து 38நிமிடங்கள் தொலைவில் உள்ளது இந்த இடம்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
இதன் அருகாமையில் நிறைய கோயில்கள் உள்ளன. மேலும் கூக்ளி ஆறு இதையடுத்தே ஓடுகிறது. இந்திய அருங்காட்சியகம் அமைந்துள்ளது.