ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தோர்கர் அல்லது சித்தூர் என்றழைக்கப்படும் இந்த நகரம் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது தன் கம்பீரமான கோட்டைகளுக்காகவும், கோயில்களுக்காகவும், கோபுரங்களுக்காகவும் மற்றும் அரண்மனைகளுக்காகவும் புகழுடன் விளங்குகிறது.
புராணிகப்பிண்ணனி
இந்திய வரலாற்றில் சித்தோர்கர் பிரதேச மாவீரர்களின் கதைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. புராணக்கதைகளின்படி, மஹாபாரத இதிகாசத்தின் பாண்டவ சகோதர்களில் ஒருவரான பீமன் இந்த சித்தோர்கர் பிரதேசத்துக்கு வருகை தந்து சாகாவரம் பெறுவதற்கான சித்திகள் குறித்து ஒரு குருவிடம் தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பீமனுடைய அவசர குணத்தின் காரணமாக அவரால் அந்த சித்தியைப் பெற முடியாமல் போயிற்று. ஆகவே மிதமிஞ்சிய ஏமாற்றத்திலும் கோபத்திலும் அவர் பூமியை ஓங்கி உதைத்த போது உருவான நீர்த்தேக்கமே தற்சமயம் பீம் லாட் என்றழைக்கப்படும் ஏரி என்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
சித்தோர்கர் மற்றும் சுற்றிலுமுள்ள விசேஷ அம்சங்கள்
இந்நகரத்தின் பிரதான சிறப்பம்சம் 180 மீ உயரத்தில் அமைந்துள்ள சித்தோர்கர் கோட்டையாகும். இந்த கோட்டை வளாகத்தில் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மஹாராணா ஃபதேஹ் சிங் மன்னரால் கட்டப்பட்ட ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை ஒரு அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஸ்தலமாகும். இந்த அரண்மனையின் உள்ளே ஒரு அற்புதமான விநாயகர் சிலை, ஒரு பெரிய நீரூற்று மற்றும் அழகிய சுவரோவியங்களைக் காணலாம்.
மேலும், சன்வாரியாஜி கோயில், துல்ஜா பவானி கோயில், ஜோக்னியா மாதாஜி கோயில் மற்றும் மாத்ரி குண்டியா கோயில் போன்ற பலவிதமான ஆன்மீக திருத்தலங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.
இப்பிரதேசத்தின் இயற்கை எழிலை முழுமையாக ரசிப்பதற்கு பயணிகள் இங்குள்ள பாஸி காட்டுயிர் சரணாலயத்திற்கு விஜயம் செய்யலாம். இது 50 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
இது தவிர சீதாமாதா சரணாலயம் மற்றும் பைன்ஸ்ரோர்கர் சரணாலயம் போன்றவையும் அவற்றிலுள்ள வளமான காட்டுயிர் அம்சங்களுக்காக சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகின்றன.
இந்நகரத்தின் தலவரலாறு மற்றும் பாரம்பரியப் பண்பாட்டியல் அம்சங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் பயணிகள் இங்குள்ள தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு தவறாமல் விஜயம் செய்யலாம்.
இங்கு வரலாற்று காலத்தைச் சேர்ந்த பல அழகிய கைவினைக் கலைப்பொருட்கள், அபூர்வ ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குப்தர்கள் மற்றும் மௌரியர்கள் காலத்தோடு தொடர்புடைய கைவினைக் கலைப்பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒரு கூடுதல் தகவலாகும்.நேரம் இருப்பின் சுற்றுலாப்பயணிகள் பிஜாய்பூரிலுள்ள ஒரு பழங்காலக் கோட்டையை பார்த்து வரலாம்.
இந்தக் கோட்டை தற்சமயம் ஒரு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. பிரதாப்கர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள தேவ்கர் எனும் இடத்திலுள்ள ஒரு 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையும் முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இங்கு பல பிரசித்தமான கோயில்கள் மற்றும் அரண்மனைகள் போன்றவையும் உள்ளன. மேணல்சித்தோர்கர் நகரிலிருந்து 90கி.மீ தூரத்திலுள்ள சிறுநகரம் மேணல் ஆகும்.
இது ‘சிறிய கஜுராஹோ’ என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. இயற்கை வனப்பு கொண்ட சூழல் மற்றும் அழகிய கோயில் கட்டமைப்பு போன்றவற்றை பெற்றிருப்பதால் இப்படி ஒரு புகழை இந்த சிறுநகரம் பெற்றுள்ளது.
அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட பல பௌத்த கோயில்கள் இப்பகுதியில் உள்ளன அவற்றில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோயில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தன் இயற்கை எழில் காரணமாக இந்த நகரம் ஒரு பிரபலமான சிற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இவை தவிர, சித்தோர்கர் நகருக்கு வருகை தரும் பயணிகள் கௌமுக் குண்ட் எனப்படும் ஏரிக்கும் விஜயம் செய்யலாம்.
பசுவின் தலை வடிவத்தில் காட்சியளிப்பதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகிலேயே ராணி பிந்தர் சுரங்கப்பாதை எனும் மற்றொரு பிரசித்தமான விசேஷ சுற்றுலா அம்சமும் அமைந்துள்ளது.
சித்தோர்கர் நகருக்கான பயண வசதிகள்
சித்தோர்கருக்கு அருகில் உள்ள விமானத்தளம் 90கி.மீ தூரத்திலுள்ள தபோக் விமான நிலையமாகும். இது மஹாராணா பிரதாப் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது.
மேலும், சித்தோர்கர் ரயில் நிலையமும் அஜ்மேர், ஜெய்பூர், உதய்பூர், கோட்டா மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ளது. நல்ல சாலை வசதிகளால் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்நகருக்கு செல்வதற்கு மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.
சித்தோர்கர் நகரின் தட்பவெப்ப இயல்புகள்
சித்தோர்கர் நகரம் கோடைக்காலத்தில் மிகக்கடுமையான உஷ்ணத்துடன் காணப்படுகிறது. அச்சமயம் அதிகபட்சமாக 44° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் தொடர்ச்சியற்ற மழைப்பொழிவு காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் 60 செ.மீ முதல் 80 செ.மீ வரையிலான மழையை இப்பகுதி பெறுகிறது. பொதுவாக குளிர்காலமே இந்த சுற்றுலாத்தலத்திற்கு பயணம் செய்து ரசிக்க ஏற்றதாக கருதப்படுகிறது. அக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக முறையே 11° C மற்றும் 28° C நிலவுகிறது.