பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபதேஹ்கர் ஆழமான வரலாற்று பின்னணி நிரம்பிய ஒரு முக்கிய நகரமாகும். பஞ்சாப் பிரதேசத்தின் பாரம்பரிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ள இது சிக்கிய இனத்தார்க்கும் முஸ்லிம்களுக்கும் போர் நடைபெற்ற பூமியாகவும் அறியப்படுகிறது. இந்நகரத்தில் ஃபதேஹ்கர் சாஹிப் எனும் பிரசித்தமான சீக்கிய குருத்வாரா அமைந்திருக்கிறது.
குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் மகன்களான ஷாஹிப்ஸதா ஃபதேஹ் சிங் மற்றும் ஷாஹிப்ஸதா ஸொரோவர் சிங் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்த ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. மதம் மாற மறுத்த இந்த இருவரும் வாஸிர்கான் என்பவரால் செங்கல் சூளையில் உயிரோடு எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு வரலாற்றுப்பின்னணிகள்!
இங்கு இஸ்லாமியர்களை வீழ்த்தி சீக்கியர்கள் ஆட்சியை பிடித்ததால் இந்நகரம் அந்த வெற்றியை குறிக்கும் விதமாக 'வெற்றி நகரம்' என்ற பொருள்படும்படி அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் நான்கு நுழைவாயில்களை கொண்டுள்ளது. திவான் தோடர்மால், நவாப் ஷெர் முகமது கான், பாபா பண்டா சிங் பஹதூர் மற்றும் பாபா மோதி ராம் மேஹ்ரா என்ற பெயர்களில் அந்த நான்கு வாயில்களும் அழைக்கப்படுகின்றன.
மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கும் இந்த வாயில் அமைப்புகள் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் வீற்றிருக்கின்றன.
ஃபதேஹ்கர் சாஹிப் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்!
ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்தில் சங்கோல், ஆம் காஸ் பாக், மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில் மற்றும் மிதக்கும் உணவகம் போன்றவை முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.
ஹோலி, துஷேரா, திவாளி மற்றும் பைசாகி போன்ற திருவிழாக்கள் இந்நகரத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இவை தவிர ஷாஹீதி ஜோர் மேளா எனும் முக்கியமான திருவிழா ஒன்று இந்நகரத்தில் வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
இது சீக்கிய வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுபடுத்தும் விதத்தில் நடத்தப்படுகிறது. இந்த நகரத்துக்கு அருகிலேயே சிர்ஹிந்த் மற்றும் சங்கோல் எனும் இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களும் அமைந்திருக்கின்றன.
எப்படி செல்லலாம்?
ஃபதேஹ்கர் சாஹிப் நகரம் சண்டிகர் நகரத்திலிருந்து 42.4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சாலைமார்க்கமாக இந்த தூரத்தை 52 நிமிடங்களில் கடக்கலாம்.
இந்நகரத்திற்கான பிரத்யேக ரயில் நிலையமும் இங்கு அமைந்திருக்கிறது. சிர்ஹிந்த் ரயில் நிலையம் மூலமாகவும் பயணிகள் இந்நகரத்துக்கு வரலாம். இது ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது.
சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம்
ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்தின் பருவநிலையானது பெரும்பாலான வட இந்திய நகரங்களின் பருவநிலை இயல்பை ஒத்ததாகவே காணப்படுகிறது.
கடுமையான கோடைக்காலம், குளுமை மற்றும் ஈரப்பதம் நிரம்பிய மழைக்காலம் மற்றும் குளிர் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை இந்நகரம் கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்கள் சுற்றுலாவுக்கு ஏற்றவையாக உள்ளன.



Click it and Unblock the Notifications