1540ம் ஆண்டில் ஜாம் ரவால் எனும் மன்னர் இந்த ஜாம்நகரை நவாநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கினார். ராண்மல் ஏரியை சுற்றி ரங்மதி ஆறும் நாக்மதி ஆறும் ஒன்று கலக்கும் இடத்தில் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. பின்னாளில் மஹாராஜா குமார் ஷீ ரஞ்சித்சிங்ஜி என்பவரால் 1920 ம் ஆண்டில் இந்நகரம் புதுப்பிக்கப்பட்டு ஜாம்நகர் அல்லது ‘ஜாம்களின் நகரம்’ என்று அழைக்கப்பட ஆரம்பித்தது.
ஜாம் எனும் சொல் அரசர் என்ற பொருளை குறிக்கிறது. கிருஷ்ண பஹவான் உதித்த யாதவ வம்சத்தை சேர்ந்தோராக கருதப்படும் ஜடேஜா ராஜபுத்திர வம்சத்தினர் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.
ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்தினரை மதுராவிலிருந்து இடம் பெறச்செய்து இந்த ஜாம்நகர் ராஜ்ஜியப்பகுதியில் இருந்த துவாரகாவிற்கு குடியேறச்செய்ததாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.
தோற்றம்
ஜாம் ரவால் மன்னரின் தந்தையான ஜாம் லக்காஜிக்கு பஹதூர்ஷா’வால் 12 கிராமங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பின்னர் ஜாம் ரவால் கத்தியவார் பகுதிக்கு இடம் மாறி நவாநகர் (புதுநகரம்) எனும் நகரத்தை நிர்மாணித்தார்.
ஜாம் விபாஜி எனும் மன்னரின் ஆட்சியின்போது 1852ம் வருடத்தில் இந்த நகரம் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ராஜ்கோட் வரையிலான ரயில் பாதை என்று நவீன வளர்ச்சிகளை கண்டது.
மஹாராஜா குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்ஜி
ஜாம்நகரை சேர்ந்த மஹாராஜா குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்ஜி ஒரு உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஆவார். ஜாம்நகரின் வளர்ச்சியில் இவரது பங்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது. 1907 முதல் 1933 வரை இவர் இந்நகர்ப்பகுதியை ஆண்டுள்ளார்.
1914ம் ஆண்டில் சர் எட்வர்டு லுட்யென்ஸ் எனும் கட்டிடக்கலைஞரின் உதவியுடன் இவர் இந்த நகரத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். ஐரோப்பிய கட்டிடக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் ஐரோப்பிய பாணியில் ஜாம்நகரை இவர் மாற்றி அமைத்தார்.
அதற்கு முன்பு கோட்டை சுவரால் சூழப்பட்டிருந்த நகரம் திறந்து விடப்பட்டு நகரத்தின் வீடுகள் யாவும் ஒழுங்கு தன்மை கொண்டவையாக ஒரே சீர்மையுடன் சீர்திருத்தப்பட்டன.
இதனால் ‘இந்தியாவின் பாரிஸ்’ எனும் பட்டப்பெயரையும் இந்த ஜாம்நகர் பெற்றது. தற்போது இந்நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் விலிங்க்டன் கிரசன்ட், பிரதாப் விலாஸ் பேலஸ், சோலரியம் போன்றவை மஹாராஜா குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்ஜி’யின் ஆதரவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இது தவிர பேடி போர்ட் எனும் துறைமுகம் மற்றும் ரயில்பாதை இணைப்புகள் போன்றனவும் இவரது காலத்தில் உருவாக்கப்பட்டன.
இதர சிறப்புகள்
நீண்ட காலத்திற்கு முன்னர் ஜாம்நகர் ஒரு முத்துக்குளிப்பு நகரமாக விளங்கியிருந்தது. அச்சுகளை பயன்படுத்தி துணிகளில் வண்ண சித்திரப்பொதிப்புகளை உருவாக்கும் பாரம்பரியமான ‘பாந்தனீ’ நுட்பம் அன்றும் இன்றும் இப்பகுதியில் பிரசித்தமான தொழில் நுணுக்கமாக இருந்து வருகிறது.
அதிக நேரம் பிடிக்கும் சிக்கலான இந்த தொழில் நுணுக்கத்தில் இந்த நகரம் 500 வருட பாரம்பரிய அனுபவத்தை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரம்
குஜராத் மாநிலத்தின் வட்டார வழக்கு மொழியான கத்தியவாடி மொழி இங்கு பரவலாக பேசப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் ஒரு சிறிய எண்ணிக்கையில் கட்ச்சி மொழியும் பேசப்படுகிறது.
சுற்றுலா சுவாரசியங்கள்
பல இயற்கை பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை ஜாம்நகர் பெற்றுள்ளது. இந்தியாவிலுள்ள ஒரே கடலுயிர் சரணாலயமான ‘தேசிய கடலுயிர் பூங்கா (தி மரைன் நேஷனல் பார்க்) இந்த ஜாம்நகருக்கு அருகில் உள்ள பிரோதன் எனும் பவளப்பாறை தீவுப்பகுதியில் அமைந்துள்ளது.
கிஜாடியா பறவைகள் சரணாலயம், காகா காட்டுயிர் சரணாலயம் மற்றும் பீட்டர் ஸ்காட் தேசிய இயற்கை பூங்கா போன்றவை ஜாம்நகர் பகுதியிலுள்ள முக்கியமான இயற்கை சுற்றுச்சூழல் சுற்றுலா அம்சங்களாகும்.
வர்தமான் ஷா கோயில், ரய்சி ஷா கோயில், ஷேத் கோயில் மற்றும் வசுபுஜ்ய ஸ்வாமி கோயில் போன்ற முக்கியமான ஜெயின் கோயில்களை ஜாம்நகர் பெற்றிருக்கிறது.
இங்குள்ள மற்றொரு கோயிலான பால ஹனுமான் கோயில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ராம் துன் எனும் நீண்ட மந்திர உச்சாடனம் இந்த கோயிலில் 1964ம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிகழ்த்தப்பட்டு வருவதற்காக இது கின்னஸ் அங்கீகாரம் பெற்றுள்ளது.
லகோடா ஏரிக்கு அருகில் உள்ள லகோடா கோபுரம் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. இது ஜாம் ரண்மல்ஜி ஆட்சியின்போது பஞ்ச நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரஞ்சித்சாகர் அணை, பிரதாப் விலாஸ் அரண்மனை, ரத்தன் பாய் மஸ்ஜித், தர்பார் காத், பித்பஞ்சன் கோயில், கிஜாடியா கோயில், போஹ்ரா ஹஜிரா, புஜியோ கொத்தோ, மானெக்பாய் முக்திதாம், ரோஜி போர்ட் மற்றும் பேடி போர்ட் ஆகியவனவும் ஜாம்நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
ஜடேஜா ராஜபுதன வம்சத்தை சேர்ந்த ஜாம் ராஜவம்சம் மற்றும் புகழ் பெற்ற கிரிக்கெட் ஆர்வலரான ரஞ்சித்சிங்ஜி போன்றோருக்காக புகழ்பெற்றுள்ள இந்த ஜாம் நகர் ஒரு சுவாரசியமான சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.



Click it and Unblock the Notifications