ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிகானேர் நகரம் பாலைவன பூமியின் தங்கநிற மணற்குன்றுகள், ஒட்டகச்சண்டைகள் மற்றும் ராஜபுதன மாவிரர்களின் வீரக்கதைகள் என்று எல்லா அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பாலைவன நகரம் தார் பாலைவனத்தின் மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது.
ரத்தோர் வம்சத்தைச் சேர்ந்த ராவ் பிகாஜி எனும் இளவரசரால் 1488ம் ஆண்டு இந்த நகரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. செழுமையான ராஜபுதன பாரம்பரியம், சுவையான புஜியா தின்பண்டம், வண்ணமயமான திருவிழாக்கள், கம்பீரமான அரண்மனைகள், அற்புதமான சிற்பங்கள் மற்றும் வானுயர எழுந்து நிற்கும் மணற்பாறைக் கற்களால் ஆன கோட்டைகள் போன்ற ஏராளமான அம்சங்கள் இந்த நகரத்தில் நிறைந்துள்ளன.
நாவில் நீர் சுரக்க வைக்கும் பாரம்பரிய உணவு வகைகள்
புஜியா எனப்படும் தின்பண்ட தயாரிப்பு உருவான முக்கிய கேந்திரமாக பிகானேர் நகரம் பெயர் பெற்றுள்ளது. 1877ம் ஆண்டிலிருந்து இதன் வரலாறு துவங்குகிறது. இப்பகுதியை ஆண்ட மன்னர் துங்கார் சிங்கின் ஆட்சிக்காலத்தில் அரச விருந்தினர்களின் உபசரிப்புக்காக இந்த ‘துங்கார்ஷாஹி புஜியா’ எனும் பெயரில் இந்த தின்பண்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எச்சில் ஊற வைக்கும் பிகானேரி புஜியாக்கள், இனிப்புகள் மற்றும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றின் தயாரிப்புக்கு பெயர் பெற்றுள்ள பிகானேர் நகரத்தில் ‘பிகாஜி’ மற்றும் ‘ஹல்திராம்ஸ்’ போன்ற பிரபலமான நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
பிக்கானேரி புஜியா எனப்படும் மொறுமொறுப்பான தின்பண்டம் கடலை மாவு, மசாலா, சிறு பயறு, உப்பு, மிளகாய், மிளகு, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகிய பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மிகப்பெரிய தின்பண்ட மற்றும் இனிப்பு தயாரிப்பு நிறுவனமான ‘ஹல்திராம்ஸ்’ கங்காபிசேன்ஜி அகரவால் என்பவரால் பிகானேரில் 1937ம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது.
பிகானேர் பிரதேசத்தின் ஒட்டகத் திருவிழாக்கள்
சுவையான புஜியா தின்பண்டங்களுக்கு அடுத்தபடியாக பிரசித்தமான ‘பிகானேர் திருவிழா’ எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் இந்த பாலைவன நகரத்துக்கு சுற்றுலாப்பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.
‘பாலைவனக்கப்பல்’ என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் ஒட்டகத்தை மையப்படுத்தியதாக இந்த திருவிழா அமைந்துள்ளது. ஜுனாகர் கோட்டையின் அருகில் நடத்தப்படும் ஒரு வண்ணமயமான ஒட்டக ஊர்வலத்திலிருந்து இந்த திருவிழா துவங்குகிறது.
அச்சமயம் ஒட்டகங்கள் வண்ணமயமான துணிகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. ஒட்டகப்பந்தயங்கள், ஒட்டகப்பால் கறவை, ஒட்டக முடி அலங்காரம், ஒட்டக அழகுப்போட்டிகள், ஒட்டக வித்தை காட்சிகள் மற்றும் ஒட்டக இசை நிகழ்ச்சிகள் போன்ற பலவிதமான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இந்த ‘பிகானேர் திருவிழா’ வின் போது நடைபெறுகின்றன.
பிகானேர் நகரத்தின் சிறப்பம்சங்கள்
பிகானேர் நகரத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள லால்கர் எனும் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்ட அரண்மனையை பார்த்து ரசிக்கலாம். இந்த அரண்மனையின் கட்டமைப்பானது ராஜபுதன, முகலாய மற்றும் ஐரோப்பிய பாணிகளை கலந்து உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநீண்டிருக்கும் அழகான பலகணி மாடங்கள் இந்த அரண்மனையின் அழகை கூட்டுகின்றன. இதுதவிர, கஜனேர் அரண்மனை எனும் புகழ்பெற்ற மாளிகையும் இங்கு உள்ளது. இது பிக்கானேர் மன்னர்கள் வேட்டைக்கு செல்லும்போது தங்கும் மாளிகையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையில் நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ள தூண்கள், அலங்காரமான பலகணி மாடங்கள் மற்றும் சல்லடைச்சாளர வடிவமைப்புகள் போன்றவை பயணிகளை பெரிதும் கவர்கின்றன.
மேலும் அரண்மனையை சுற்றியுள்ள பிரதேசத்தில் கலைமான்கள், கருப்பு மான்கள், நில்கை மான்கள், சிறு மான்கள், நீல எருதுகள் மற்றும் புள்ளிமான்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம்.
பிகானேர் நகரத்தின் இதர சுற்றுலா அம்சங்களாக ஜுனாகர் கோட்டை, சாதுல் சிங் மியூசியம், கங்கா கோல்டன் ஜுபிளி மியூசியம், பண்டாசேர் ஜெயின் கோயில் மற்றும் லட்சுமிநாத் கோயில் போன்றவை பிரசித்தமாக அறியப்படுகின்றன.
நேரம் இருப்பின் பயணிகள் ஷிவ் பாரி கோயில், ரத்தன் பெஹாரி கோயில், கொலயாத் கோயில், கர்னி மாதா கோயில், கஜனேர் சரணாலயம் மற்றும் ஒட்டகப்பண்ணை போன்ற இடங்களுக்கு விஜயம் செய்யலாம்.
சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேகமாக ஒட்டகச்சவாரி, பாலைவன ஜீப் சவாரி, பாலைவன இரவுச்சுற்றுலா மற்றும் ‘கேம்பிங்’ போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பாரம்பரிய சுற்றுலா விடுதிகள் இங்கு ஏராளமாக உள்ளன.
பிகானேர் நகருக்கான பிரயாண வசதிகள்
விமானம், ரயில் மற்றும் சாலைவழி போன்ற போக்குவரத்து வசதிகளால் பிகானேர் நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பிகானேர் நகரத்துக்கு அருகில் ஜோத்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது.
மேலும், பிகானேர் ரயில் நிலையம் முக்கிய நகரங்களான ஜெய்பூர், சூரு, ஜோத்பூர், டெல்லி, கல்கா, ஹௌரா மற்றும் படிண்டா போன்றவற்றுக்கு ரயில் சேவைகளைக் கொண்டுள்ளது.
இவை தவிர, ஜோத்பூர், ஜெய்பூர், டெல்லி, ஆக்ரா, அஜ்மீர், அஹமதாபாத், ஜுஞ்ஜுனு, ஜெய்சல்மேர், பார்மேர், உதய்பூர் மற்று கோட்டா போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பிகானேர் நகரத்திற்கு சிறப்பான பேருந்து சேவைகள் உள்ளன.
பிகானேர் - பருவநிலை
பாலைவன நகரமான பிகானேர் மிகக்கடுமையான கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தைப் பெற்றுள்ளது. கோடைக்காலத்தில் பகலைவிட இரவு நேரம் இனிமையானதாக காணப்படுகிறது.
மழைக்காலத்தில் இப்பகுதி அதிக ஈரப்பதத்தைக் கொண்டதாகவும் உள்ளது. டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாதம் வரை நிலவுகிறது. பிகானேர் நகரத்துக்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் பயணம் மேற்கொள்வது சிறந்தது.இக்காலத்தில் சீதோஷ்ணநிலை இனிமையாக காணப்படுகிறது. மழைக்காலத்திலும் பிகானேர் நகரத்துக்கு சிறிய சுற்றுலாப் பயணமாக மேற்கொள்ளலாம்.