சொக்கவைக்கும் அழகுடன் கூடிய சாகச பிரதேசங்கள், பசுமை மாறாக் காடுகள், கொஞ்சும் பறவைகளின் ஒலியுடன், ஆர்ப்பரிக்கும் அருவிகளின் சத்தங்களும் சேர்த்து பிறக்கும் காட்டு சுற்றுலா உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றால் நம்புவீர்களா? இதோ இந்த 15 இடங்களுக்கும் ஒரு தடவை சென்று வந்தீர்களென்றால், உங்கள் தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும். எவை அந்த இடங்கள்.. வாருங்கள் பார்க்கலாம்..
மஹாபலேஷ்வர்
சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை பார்க்க வசதியாக 30 மலைக்காட்சித் தளங்கள் மஹாபலேஷ்வரில் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரின்ங்கள் போன்றவற்றை மிக அருகில் கண்ணுக்கு விருந்தாக காணலாம்.
வில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் , கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகள்,ஆர்தர் சீட் என்று அழைக்கப்படும் மற்றொரு மலைக்காட்சி தளம் , எக்கோ பாயிண்ட் என்ற மற்றொரு காட்சி தளம் என எக்கச்சக்க இடங்கள் இந்த ஊரில் இருக்கிறது.
இது குறித்த மேலும் தகவல்களுக்கு இதைச் சொடுக்குங்கள்.
மாத்தேரான் மலை
எல்லா மலைவாசஸ்தலங்களையும் போன்றே இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலமும் பல மலைக்காட்சி தளங்களை கொண்டுள்ளது. இந்த மலைக்காட்சி தளங்களிலிருந்து மயக்க வைக்கும் பள்ளத்தாக்கு காட்சிகளை காணமுடிகிறது. இங்குள்ள 38 ம.காட்சித்தளங்களில் ‘பனோரமா பாயிண்ட்' எனும் தளம் 360° கோணத்தில் நாலா புறமும் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற காட்சிகள், ‘ஹார்ட் பாயிண்ட்' எனும் காட்சி தளத்திலிருந்து மும்பை நகரின் ஜொலிப்பை இரவில் பார்க்கும் நிகழ்வு, . பிரபால் கோட்டை எனப்படும் புராதன வரலாற்று கோட்டையை ‘லூயிசா பாயிண்ட்' எனும் இடத்திலிருந்து காணும் அற்புதம், மங்கீ பாயிண்ட், போர்க்குபைன் பாயிண்ட், ஒன் ட்ரீ ஹில் பாயிண்ட், சார்லோட் ஏரிப்பகுதி போன்ற பல அற்புதமான இடங்களைக் காணும்போதும், ரசிக்கும்போதும் உங்களை நீங்கள் மறந்தே விடுவீர்கள்.
பாஞ்ச்கணி
பாஞ்ச்கணியின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க நீங்கள் விரும்பினால் அதற்கென்று குறிப்பாக நிறைய இடங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள வாய் கிராமத்தில் உள்ள தூம் அணைத்தேக்கத்தில் உள்ள படகுச்சவாரி செய்யலாம். இது அமைதியாக ஓடும் கிருஷ்ணா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கு பார்ஸி பாயிண்ட் , சிட்னி பாயிண்ட் என்ற இரண்டு மலைக்காட்சி தளங்கள்ஸ, பிலார் நீர்வீழ்ச்சி,டேபிள்லேண்ட், குதிரை ஏற்றம், பாராசூட் பயணம் , ஷெர்பாக், பலவிதமான பறவைகள், முயல்கள், வான்கோழிகள் மற்றும் அன்னப்பறவைகள் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கலாம். பாஞ்ச்கணியில் காலனிய காலத்தை சேர்ந்த பல பழமையான பல தங்குமிடங்கள் உள்ளன. ஆகவே பரபரப்பான சந்தடி வாழ்க்கையிலிருந்து விலகி கொஞ்சம் அமைதியை விரும்பி வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை வாடகைக்கு எடுத்து தங்கலாம்.
கண்டாலா
சஹயாத்ரி மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின்மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மலைவாசஸ்தலம் மிக அற்புதமான பருவநிலையை வருடமுழுவதும் கொண்டுள்ளது. இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் தன் அழகிய பள்ளத்தாக்குகள், உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள், ரம்மியமான ஏரிகள், சொர்க்கலோகம் போன்ற அருவிக்காட்சிகள் போன்றவற்றால் இங்கு வருகை தரும் பயணிகளை மெய்மறக்க செய்கிறது.
அம்ருதாஞ்சன் பாயிண்ட், பிரபு மூக்கு சிகரம், ரைவுட் பார்க் , புஷ்ஷி அணை, குகைக்கோயில்கள், நடைப்பயணம் என இந்த சுற்றுலாவை பாரம் மறந்து கொண்டாடலாம். இயற்கை வனப்பை ஏராளமாய் பெற்றுள்ள இந்த கண்டாலா மலைவாசஸ்தலத்துக்கு மழைக்காலத்தில் விஜயம் செய்தால் பூத்துக்குலுங்கும் பசுமையை பார்த்து ரசிக்கவும் மயங்கவும் செய்யலாம். கண்டாலாவின் முழு அழகை தரிசிக்க அக்டோபர் முதல் மே மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் சிறந்தது.
மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்:
லோனாவலா
சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் இந்த ஸ்தலம் மலையேற்றம், நடைப்பயணம் போன்றவற்றுக்கு உகந்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. அது தவிர வரலாற்றுப்பின்னணி கொண்ட கோட்டைகள், புராதனக்குகைகள் மற்றும் அமைதியான ஏரிகள் போன்றவை இந்த ஸ்தலத்தைச்சுற்றிலும் நிறைந்துள்ளன. இங்கு பருவநிலை மிகவும் இனிமையானதாக வருடம் முழுவதுமே பயணிகளை வரவேற்கும் இயல்புடன் விளங்குகிறது.
ஒரு புறம் பார்த்தால் தக்காண பீடபூமியும் மறுபுறம் பார்த்தால் அழகிய கொங்கண கடற்கரையும சூழ்ந்திருக்க, ஒரு வண்ண ஓவியம் போல் நம் கண் முன் விரியும் இந்த அற்புத ஸ்தலத்தை மழைக்காலத்தில் தரிசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. ஒரு அமைதியான மாலை நேரத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் லோனாவலா பகுதியிலுள்ள முக்கியமான ஏரிகளும், அணைகளுமான பாவ்னா ஏரி, வலவண் ஏரி, துங்கர்லி அணை மற்றும் துங்கர்லி ஏரி போன்ற இடங்களுக்கு வருகை தரலாம். அல்லது மலைஏற்றம் மற்றும் இந்தியாவின் புராதன கட்டிடக்கலை அம்சங்கள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் துங், திலோனா மற்றும் லோஹகர் போன்ற அருகிலுள்ள கோட்டைகளுக்கு செல்லலாம்.
மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்
இகத்புரி
மிரட்ட வைக்கும் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலத்துக்கு இயற்கையாகவே ஒரு அற்புதமான புவி அமைப்பு வாய்க்கப்பட்டுள்ளது. வழியும் அருவிகள் மற்றும் பசுமை அடர்ந்த காடுகள் என்று எங்கு திரும்பினாலும் நம் கண்களுக்கு திகட்ட வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் ததும்புகிறது இந்த பிரதேசத்தில். நகரமயமாக்கல் இன்னமும் ஆக்கிரமிக்கத் துவங்காத காரணத்தால் இகத்புரி தன் மயக்கும் புராதன அழகை இழக்காமல் பயணிகளை வசீகரிக்கின்றது.
பெருநகரங்களின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையின் சுவடுகளை கழுவக்கூடிய சக்தி கொண்டது இதன் அழகு. இது அடிக்கடி இங்கு வருகை தரும் பயணிகள் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மையாகும். திரிங்கால்வாடி கோட்டைக்கு அருகே உள்ள திரிங்கால்வாடி ஏரியானது குடும்பத்துடன் ஒரு மாலை நேரத்தை கழிப்பதற்கேற்ற அருமையான இடமாக உள்ளது. மேலும் இயற்கை உபாசகர்கள் இங்கு காணப்படும் காட்டுத்தாவரங்கள் மற்றும் பல்வகை பறவைகள் மீது தங்கள் மனதை பறிகொடுக்கின்றனர். சாகச விரும்பிகளுக்கும் மலை ஏற்றத்தை விரும்புபவர்களுக்கும் ஏற்ற மலையேற்றப்பாதைகளும் இங்கு அதிகம் காணப்படுகின்றன.
மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும் :
கர்ஜத்
கர்ஜத் சுற்றுலாத்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத சாகச விளையாட்டுத் தலைநகரமாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை. ரம்மியமான இந்த மலைஸ்தலம் பல சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக கர்ஜத் நகரம் மலையேற்றத்துக்கு பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது.
அனுபவம் இல்லாதவர்களுக்கு ஏற்ற பல சுலபமான மலையேற்றப்பாதைகளும், அனுபவசாலிகளுக்கு ஏற்ற கடினப்பாதைகளும் இங்கு ஏராளம் அமைந்துள்ளன. இந்த மலைப்பாதைகளில் பயணிக்கும்போது நம்மால் சுற்றியுள்ள இயற்கை வனப்பை மிக அருகில் கண்டு ரசிக்க முடிகிறது. எனவே இவை மலையேற்ற ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயற்கை ரசிகர்களுக்கும் ஏற்றதாக உள்ளன.
உல்லாஸ் ஆற்றில் மிதவைப்படகு சவாரி செல்வது இங்குள்ள மற்றொரு சாகச பொழுதுபோக்கு அம்சமாகும். இவை தவிர இந்த ஸ்தலத்தில் அமைந்திருக்கும் புராதான சின்னமான பேத் கோட்டை மற்றும் புத்த கலையம்சங்களை கொண்டுள்ள கொண்டனா குகைகள் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இந்த குகைகளில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் வரலாற்று மற்றும் சிற்பக்கலை ஆர்வலர்களை மிகவும் கவரும் முக்கிய அம்சங்களாகும். பேத் கோட்டையிலிருந்து பார்க்க கிடைக்கும் இயற்கைக்காட்சி மிக அற்புதமான ஒரு தரிசனமாகும்.
மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்
மால்ஷேஜ் காட்
மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன் கடல் மட்டத்திலிருந்து தலை சுற்ற வைக்கும் 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மால்ஷேஜ் காட் மலை ஸ்தலம் ஆரோக்கியமான இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில் எண்ணற்ற ஏரிகளும், பாறைகளுடன் காட்சியளிக்கும் மலைகளும் ஏராளம் நிரம்பியுள்ளன.
இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்ற விரும்பிகளுக்கும் மிகவும் பிடித்தமான ஸ்தலமாக இது புகழ்பெற்றுள்ளது. வனம்போன்ற நாட்டுப்புற அழகுடன் காட்சியளிக்கும் இந்த மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் பல ஆறுகளும் ஓடுவதால் இது மற்ற மலைப் பிரதேசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விசேஷமாக திகழ்கிறது.
இங்குள்ள பல கோட்டைகள் வரலாற்றுக்காலத்தை தரிசிக்க உதவும் ஜன்னல்களாக காட்சியளிக்கின்றன. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகளும், சரணாலயத்தில் காணப்படும் பல வகைத்தாவரங்களும் உயிரினங்களும் இப்பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.இவை தவிர இந்த மால்ஷேஜ் ஸ்தலத்தில் மலையேற்றம், நடைப்பயணம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்ற சூழல் அமைந்திருப்பதும் விசேஷமான அம்சமாகும்.
மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்:
அம்போலி மலைநகரம்
அம்போலி மலைநகரம் பல அழகான அருவிகளைக்கொண்டுள்ளது. ஷிர்காவ்ங்கர் அருவி, மஹாதேவ் அருவி மற்றும் நாகட்டா அருவி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. நாகட்ட அருவிப்பகுதி சிற்றுலாவுக்கான ஒரு சிறந்த இடமாக விளங்குகின்றது. ஹிரண்யகேஷி நீர்வீழ்ச்சி அருகில் அதன் குகை வாசலில் ஒரு பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவனின் அருள் பெற்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் ஒரு சுவாரசியமான அம்சம் ஹிரண்ய கேஷி எனும் பெயர் பார்வதி தேவியை குறிப்பிடுவது என்பதாகும். அம்போலி மலைநகரம் பல மலைக்காட்சி தளங்களையும் கொண்டுள்ளது. சீ வியூ பாயிண்ட், கவேல்சாத் பாயிண்ட், பரீக்ஷீத் பாயிண்ட் மற்றும் மஹாதேவ்காட் பாயிண்ட் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த எல்லா மலைக்காட்சி தளங்களும் அரபிக்கடல் மற்றும் கொங்கணக்கடற்கரையின் அழகை உச்சியிலிருந்து பார்த்து ரசிக்க வசதியாக அமைந்துள்ளன.
மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்:
தோரண்மால் மலைவாசஸ்தலம்
மலையின்மீது அமர்ந்திருப்பதால் இந்த தோரண்மால் மலைவாசஸ்தலம் வருடமுழுதுமே அற்புதமான பருவநிலையை கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருப்பதால் ஒரு நல்ல விடுமுறை சுற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது. நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது. பல அற்புதமான ஏரிகளையும், மலைக்காட்சி தளங்களையும் இது கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மலையேற்றத்துக்கு உகந்த மலைப்பாதைகளும் இங்கு உள்ளன. நகரச்சந்தடிகளிலிருந்து விலகி அமைதியையும் இயற்கைச்சூழலையும் அனுபவிக்க தோதான சிறிய மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.