முரண்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று எதிரான பல அம்சங்களை அஹமதாபாத் நகரம் கொண்டுள்ளது. ஒரு புறம் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்ட குஜராத்தி வணிகர்கள் உதித்த பூமி என்றால் மறு புறம் பொது நலனை வலியுறுத்திய காந்திஜியும் இப்பகுதியில் தோன்றியுள்ளார் என்பதும் ஒரு வியப்புக்குரிய அம்சமாகும்.
இப்படியாக சுயலாபம் மற்றும் சுய சந்தோஷத்தை அடிப்படையாக கொண்ட லௌகீக மார்க்கம் மற்றும் துறவு நிலையை வலியுறுத்தும்ஆன்மீக மார்க்கம்ஆகிய இரண்டுமே இப்பகுதியின் இயல்புகளாக வேரூன்றியுள்ளன.
இந்த அம்சம் ஒட்டுமொத்த இந்தியாவின் இயல்பு என்பதால் இந்த அஹமதாபாத் நகரத்தை இந்திய கலாச்சார பண்புகளை பிரதிபலிக்கும் ‘மாதிரி இந்திய நகரம்’ என்றே குறிப்பிடலாம்.
இது இந்தியாவிலுள்ள பெருநகரங்களில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது
அஹமதாபாத் நகரத்தின் வரலாறு
குஜராத் மாநிலத்தின் பொருளாதார தலைநகர எனும் தனித்தன்மையான அடையாளத்துடன் அஹமதாபாத் நகரம் திகழ்கிறது. இது காந்திநகருக்கு வடக்கே 32 கி.மீ தூரத்தில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
கரண்தேவ் எனும் சோலங்கி வம்ச மன்னர் ஆட்சியின்போது இது கரணாவதி என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் அஹமத் ஷா எனும் சுல்தான் வம்ச மன்னரால் கைப்பற்றப்பட்ட பிறகு இதன் பெயர் அஹமதாபாத் என்றானது.
வரலாற்றுகால பதிவுகள்
அஹமத் ஷா சுல்தானின் பேரனான மஹ்மூத் பெக்டா என்பவர் 10 கி.மீ சுற்றளவையும், 12 வாசல்களையும், 189 கொத்தளங்களையும், 6000 அலங்க அமைப்புகளும் (ஆயுதத்துவாரம்) கொண்ட கோட்டை அமைப்பை உருவாக்கி இந்த அஹமதாபாத் நகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளார்.
இந்த கோட்டைச்சுவர் அமைப்பின் 12 வாசல் அமைப்புகளும் அற்புதமான சித்திரப்பொறிப்புகள் மற்றும் எழுத்துப்பொறிப்புகளுடன் காட்சியளிக்கின்றன. இவற்றில் சில வாசல்களில் பலகணி மாடங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முகாலயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த அஹமதாபாத் நகரம் அக்பரால் வெற்றிகொள்ளப்பட்டது. இருப்பினும் முகலாய மன்னர்களில் ஷாஜஹான் மன்னர் தனது முக்கியமான தடயங்களை இந்த நகரத்தில் விட்டு சென்றுள்ளார்.
இங்கு ஷாஹிபாக் எனும் இடத்தில் உள்ள மோதி ஷாஹி மஹால் எனும் அரண்மனை அவரால் கட்டுவிக்கப்பட்டிருக்கிறது.
காந்திஜியின் தாக்கம்
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்திய சுதந்திர போராட்டத்தை காந்திஜி துவங்கி வழி நடத்தத்துவங்கியபின் இந்த நகரம் தேசிய அளவில் கவனத்தை பெற ஆரம்பித்தது. இப்பகுதியில் இரண்டு ஆசிரமங்கள் காந்திஜியால் நிர்மாணிக்கப்பட்டன.
சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள தற்போது சபர்மதி ஆசிரமம் எனப்படும் சத்யாக்கிரஹ ஆசிரமம் மற்றும் கோச்ராப் ஆசிரமம் என்பவையே அவை. உப்புச்சத்தியாக்கிரகம் எனும் முயற்சியை காந்திஜி தொடங்கியபோது அதற்கான தண்டி யாத்திரையை இந்த சபர்மதி ஆசிரமத்திலிருந்துதான் துவங்கியுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அஹமதாபாத் நகரம் “மான்செஸ்டர் ஆஃப் ஈஸ்ட் (கிழக்குத்தேச தொழில் நகரம்)” என்ற சிறப்புப்பெயரால் அறியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காந்திஜியின் ஸ்வதேசி இயக்கத்தின் காரணமாக இந்நகரத்தில் கைத்தறி நெசவுத்தொழிலும் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது.
புகழ் பெற்ற நிறுவனங்களான அர்விந்த் மில்ஸ், காலிகோ மில்ஸ் போன்றவை அப்போதே இந்நகரத்தில் தோற்றுவிக்கப்பட்டு இன்றுவரை தரமான துணி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சுற்றுலா சிறப்பம்சங்கள்
வரலாற்றுச்சின்னங்கள் மட்டுமல்லாமல் அதிநவீன ஆடம்பர அங்காடி வளாகங்களும் (ஷாப்பிங் மால்), சினிமா அரங்குகளும் இந்த நகரத்தின் சுவாரசிய அம்சங்களாக காணப்படுகின்றன.
ஹுதீசிங் ஜெயின் கோயில், சிதி சயீத் மஸ்ஜித், சுவாமிநாராயண் கோயில், ஜமா மஸ்ஜித், மஹிதி ஜெயின் கோயில், அக்ஷர்தாம், நகர கோட்டைச்சுவர் மற்றும் வாசல் அமைப்புகள், ராணினோ ஹஜிரோ , பாத்ஷா னோ ஹஜிரோ, ஜுல்டா மினாரா, சர்கேஜ் ரோஸா, தாதா ஹரிர் வாவ் போன்றவை இங்குள்ள குறிப்பிடத்தக்க ஆன்மிக மற்றும் வரலாற்று அம்சங்களாகும்.
அதாலஜ் எனும் படிக்கிணறு அமைப்பும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இவை தவிர பல அருங்காட்சியகங்கள், இயற்கை பூங்கா அமைப்புகள், இந்தோரா தேசிய வனப்பூங்கா மற்றும் கன்காரியா ஏரி போன்றவையும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய சுற்றுலா அம்சங்களாக அமைந்திருக்கின்றன.
சமூக அமைப்பு
அஹமதாபாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 45 லட்சமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. வணிகரீதியான கேந்திரமாக இயங்குவதால் ஹிந்து வைஷ்ணவ மற்றும் ஜைன வகுப்புகளை சேர்ந்த வணிகர்கள் அதிகம் இங்கு வசிக்கின்றனர்.
தவிர இந்தியாவின் பார்சி வகுப்பை சேர்ந்த மக்கள் இங்குதான் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். சிறிய அளவில் 300 பேரைக்கொண்ட யூதச்சமூகமும் இந்த நகரத்தை வசிப்பிடமாக கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் எப்போதுமே இந்நகரத்தின் பெரிய வகுப்பினராக இருந்து வந்துள்ளனர். குஜராத்தி மொழியே மாநில அரசு மொழியாக இருக்கின்ற போதிலும் வியாபாரம், கல்வி, அரசு அலுவலகங்கள் மற்றும் இதர தளங்களில் ஹிந்தி மொழி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
பருவநிலை
உஷ்ணமான மித வறட்சி பருவநிலையை அஹமதாபாத் நகரம் பெற்றிருக்கிறது. ஈரப்பதம் மிக்க சூழல் மற்றும் பாலைவனச்சூழல் போன்றவற்றுக்கு இடைப்பட்டதாக இதன் சூழல் காட்சியளிக்கிறது.
கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் போன்ற மூன்று முக்கியமான பருவ காலங்களை இது பெற்றிருக்கிறது. மழைக்காலத்தை தவிர்த்து இதர பருவங்களில் இப்பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது. ஜனவரி மாதத்தில் வடக்கிலிருந்து வீசும் குளிர்காற்றுகளாக சற்று அதிக குளிர் நிலவுகிறது.
கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்
பல்வேறு இனப்பிரிவுகள் மற்றும் மதங்களை உள்ளடக்கியிருப்பதால் இந்த அஹமதாபாத் நகரம் கதம்பமான பாரம்பரிய கலாச்சார அடையாளங்களுடன் ஒளிர்கிறது. நவராத்திரி திருவிழா இங்கு கோலாகலமாக ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
கார்பா எனும் குஜராத்திய நாட்டுப்புற நடனம் இந்த கொண்டாட்டங்களின்போது முக்கியத்துவம் வகிக்கிறது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி, குடி பத்வா, ஈத் உல் ஃபித்ர், முகர்ரம் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற திருநாட்களும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
போக்குவரத்து வசதிகள்
நகரத்திற்குள்ளேயே பயணம் செய்வதற்கு வசதியாக ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. அஹமதாபாத் முனிசிபல் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் (AMTS) எனும் நகரப்போக்குவரத்து கழகம் உள்ளூர் பேருந்து சேவைகளை இயக்குகிறது.
கலுபூர் எனும் இடத்தில் அமைந்துள்ள அஹமதாபாத் நகரத்தின் பிரதான ரயில் நிலையம் கலுபூர் ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது தவிர மணிநகர், வத்வா, காந்திகிராம், அசர்வா, சந்த்லோடியா, காளிகிராம், வஸ்த்ராபூர், சபர்மதி, சர்கேஜ், நரோடா மற்றும் ஆம்லி போன்ற ரயில் நிலையங்களும் இந்நகரத்தில் அமைந்துள்ளன.
நகர மையத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டிருக்கிறது.
நவீனமாக வளர்ந்து வரும் நகரம்
அஹமதாபாத் நகரம் பல்வேறு துறைகளில் மிக வேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது. நில வணிகம், வாகனத்தயாரிப்பு, ரசாயன உற்பத்தி, பெட்ரோலியத்தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் இந்நகரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
ஐஐஎம் ( இந்திய மேலாண்மைக்கல்வி மையம்), என் ஐ டி (தேசிய வடிவமைப்புக்கல்வி மையம்), நிஃப்ட் (தெசிய ஆடை வடிவமைப்புக்கலை மையம்), திருபாய் அம்பானி இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் போன்ற முக்கியமான கல்வி நிறுவனங்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.
இன்றைய நவீன அஹமதாபாத் நகரம் ஒரு சுற்றுலாப்பயணி விரும்பக்கூடிய எல்லா அம்சங்களையும் தன்னுள் கொண்டிருக்கிறது. பெரிய ஷாப்பிங் மால்களில் ஷாப்பிங் செய்வது, சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளின் வசதிகளை அனுபவிப்பது, இயற்கைப்பூங்காக்கள் வனச்சுற்றுலா செல்வது, வரலாற்று சுற்றுலாத்தலங்களை ரசிப்பது என்று இங்கு எல்லாவகையான அம்சங்களையும் பயணிகள் அனுபவிக்கலாம்.
காந்திஜியோடு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பது இந்த நகரத்தின் சிறப்பம்சங்களில் முதன்மையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், இந்தியாவில் விஜயம் செய்ய வேண்டிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக அஹமதாபாத் நகரம் தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.