திரிச்சூர் மாவட்டத்திலுள்ள பாரம்பரிய பரபரப்பு நிறைந்த நகரமே இந்த குருவாயூர் ஆகும். மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. கேரளாவிலுள்ள முக்கியமான ஆன்மீக யாத்திரை திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
குருவாயூர் என்ற பெயரானது மூன்று சொற்களால் உருவாகியுள்ளது. குரு எனும் சொல் பிருகஸ்பதியை குறிப்பதாகவும், வாயு எனும் சொல் எங்கும் நிறைந்திருக்கும் வாயு பஹவானை குறிப்பதாகவும் ஊர் என்பது வழக்கம் போன்றே ஒரு ஊரை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் பெயர்க்காரணம் பற்றிய ஒரு ஐதீகக்கதையும் இங்கு வழங்கி வருகிறது. அதாவது, கலியுகத்தின் துவக்கத்தில் பிருகஸ்பதி குருவானவர் ஒரு கிருஷ்ணர் சிலையை கண்டெடுத்ததாகவும், இந்த சிலையை வாயுபகவானின் சிலையுடன் சேர்த்து இந்த ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்தாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த ஸ்தலத்திற்கு குருவாயூர் என்ற பெயர் ஏற்பட்டுள்ளதாக தலபுராணம் கூறுகிறது.
குருவாயூரப்பன் கோயிலுள்ள கிருஷ்ணர் சிலை இந்த இடத்தின் முக்கியமான விசேஷ அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் ஸ்ரீகிருஷ்ணர், சங்கு, சுதர்சன சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை போன்றவற்றை ஏந்தியவராக காட்சியளிக்கின்றார்.
பக்தர்களின் வருகை, பிரபல்யம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த குருவாயூர் திருக்கோயில் இந்தியாவிலேயே நான்காவது பெரிய ஹிந்து கோயிலாக அறியப்படுகிறது.
பூலோக வைகுண்டம் இந்த கோயிலில் இடம் பெற்றிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். ஹிந்துக்கள் அல்லாதோர் இக்கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் ஏனைய பிரிவினர் கோயிலுக்கு வெளியில் சுற்றிப்பார்ப்பதற்கு தடையேதுமில்லை.
குருவாயூரப்பன் கோயில் வளாகத்துக்கு வெளியே நிறைய கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் பூஜைக்கு தேவையான ஊதுவத்திகள், அகல் விளக்குகள், தேங்காய் மற்றும் பூ ஆகியவை விற்கப்படுகின்றன.
விளையாட்டுப்பொருட்கள், பழமைப்பொருட்கள், மின்சார உபகரணங்கள், துணிவகைகள், புகைப்படங்கள் மற்றும் திண்பண்டங்கள் போன்றவையும் இந்த கடைத்தெருவில் விற்கப்படுகின்றன.
ஒரு சில கடைகளில் தையல் வேலைப்பாடு கொண்ட கைவினைப்பொருட்கள், கேரள பாரம்பரிய உடைகள், பாரம்பரிய நகைகள் மற்றும் துணி ஓவியங்கள் போன்றவையும் விற்கப்படுகின்றன. இந்த கடைகளில் எது வாங்கினாலும் அதிரடியாக பேரம் பேசி வாங்குவது அவசியம். இல்லையெனில் அதிக விலை கொடுக்க நேரும்.
இந்த கடைகள் தவிர இந்த பிரசித்தமான கோயிலின் கிழக்கு வாசலுக்கு அருகே ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளும் பக்தர்களின் வசதிக்காக அமைந்துள்ளன. கோயிலை ஒட்டியுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல் விடுதிகள் இரவிலும் திறந்திருப்பதால் எந்த நேரமும் இவற்றுக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.
குருவாயூரில் பயணிகளுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைந்துள்ளன. இஸ்கான் எனப்படும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மையம் மற்றும் மாம்மியூர் மஹாதேவா கோயில் இரண்டும் பார்க்க வேண்டிய இதர ஆன்மீக அம்சங்களாகும்.
பார்த்தசாரதி கோயில், சாமுண்டேசுவரி கோயில், சோவல்லூர் சிவன் கோயில், ஹரிகன்யகா கோயில் மற்றும் வெங்கடாசலபதி கோயில் போன்றவையும் தரிசிக்க வேண்டிய இதர கோயில்களாகும்.
இவற்றோடு பாலயூர் சர்ச் எனப்படும் தேவாலயமும் புகழ் பெற்ற ஒன்றாக அறியப்படுகிறது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தேவாலயம் பயணிகள் மத்தியில் பரவலாக ரசிக்கப்படுகிறது.
புன்னத்தூர் கோட்டா எனுமிடத்தில் உள்ள ஒரு யானைகள் காப்பகமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும் குருவாயூரில் உள்ள சோவள்ளூர் கடற்கரைப்பகுதியில் அமைதியான இயற்கைச்சூழலையும் தூய காற்றையும் ரசித்துஅனுபவிக்கலாம்.
தேவஸ்வோம் மியூசியம் எனும் அருங்காட்சியகமும் இங்கு பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு முக்கிய் இடமாகும். இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங் எனும் ஓவியக்கல்லூரியும் இங்குள்ளது. இந்த கல்லூரியில் சுவரோவியங்கள், ஓவியக்கலை அம்சங்கள் மற்றும் சிற்பக்கலை போன்றவற்றில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.
குருவாயூரில் பல கோலாகலமான திருவிழாக்கள் வண்ணமயமான சடங்குகளுடன் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. குருவாயூர் உத்சவம் எனப்படும் பத்து நாள் திருவிழா இங்கு கும்ப மாதத்தில் நடத்தப்படுகிறது.
கேரள புதுவருட பிறப்பான விஷு திருநாளும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. புதுவருடப்பிறப்பு குருவாயூரில் மங்களகரமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே விஷுத் திருநாள் நிகழும் ஏப்ரல் மாத மத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூருக்கு விஜயம் செய்கின்றனர்.
அஷ்டமி ரோஹிணி எனும் மற்றொரு திருநாளும் இங்கு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஷீகிருஷ்ணர் அவதரித்த நாளாக அறியப்படுகிறது. இந்நாளை ஜன்மாஷ்டமி என்றும் குறிப்பிடுவதுண்டு.
இவை தவிர, மண்டலம், குசேலர் தினம், செம்பை இசைத்திருவிழா, ஏகாதசித்திருநாள், வைஷ்கா மற்றும் நாராயணீயத்திருநாள் போன்ற திருவிழாக்களும் குருவாயூரில் கொண்டாடப்படுகின்றன.
குருவாயூரின் பருவநிலை
வருடமுழுவதுமே வெப்பமான வறண்ட பருவநிலையை குருவாயூர் கொண்டிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் குருவாயூருக்கு விஜயம் செய்து ரசிக்கலாம். இந்த ஆன்மீக நகரின் திருவிழாக் கொண்டாட்டங்களை ரசிக்க விரும்பினால் ஆகஸ்ட் மாதம் துவங்கி நவம்பர் வரையிலான பருவம் அதற்கு ஏற்றதாகும். பொதுவாக குளிர்காலத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது உகந்தது.